நாற்காலியிலிருந்து இழுத்து.. பதற வைத்த சம்பவம்.. கர்நாடக மேலவை துணை தலைவர் ரயில் முன் பாய்ந்தது ஏன்?
பெங்களூர்: கர்நாடக மேலவை துணைத் தலைவர் எஸ்.எல்.தர்மேகவுடா ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். அவர் தலைவேறு, உடல் வேறாக ரயில்வே தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எஸ்கார்ட் பாதுகாப்பில் இருக்கக் கூடிய ஒருவர் எப்படி ரயில்வே தண்டவாளம் வரைச் சென்று தற்கொலை செய்தார் என்ற கேள்வி கர்நாடகா முழுக்க எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
இன்னொரு பக்கம், எஸ்.எல்.தர்மேகவுடா தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
கர்நாடக மேலவை துணைத் தலைவர்
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், கடூர் அடுத்த, சக்கராயபட்டணாவைச் சேர்ந்தவர்தான், எஸ்.எல்.தர்மேகவுடா. கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியின்போது, குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். அப்போது, மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த, எஸ்.எல்.தர்மேகவுடா மேலவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸைச் சேர்ந்த பிரதாப் சந்திர ஷெட்டி மேலவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகவுக்கு பலம் இல்லை
இந்த நிலையில்தான், அங்கு ஆட்சி கவிழ்ந்தது. எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. முதலில் எதிர்த்தாலும், சமீப காலமாக, பாஜக பக்கம் மதசார்பற்ற ஜனதாதளம் சாயத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், கர்நாடக சட்டசபையில் ஆளும் பசுவதைத் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. ஆனால், கர்நாடக மேலவையில் பாஜகவுக்கு பலம் இல்லை. சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
தலைவர் மீது புகார்
இதனால் ஒரு தந்திரம் செய்தது பாஜக தரப்பு. மேலவையின் தலைவர் கே.பிரதாப் சந்திரஷெட்டிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது பாஜக. எனவே தர்மேகவுடா பொறுப்பு அவைத் தலைவராக அமர்வார். அவரது ஆதரவோடு சட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என்று பாஜக நினைத்தது.
#WATCH Karnataka: Congress MLCs in Karnataka Assembly forcefully remove the chairman of the legislative council pic.twitter.com/XiefiNOgmq
— ANI (@ANI) December 15, 2020
கீழே இழுத்து தள்ளுமுள்ளு
இதேபோல டிசம்பர் 15ம் தேதி, மேலவையில் சட்ட மசோதா வந்தபோது அவைத் தலைவர் இருக்கையில், தர்மேகவுடா அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த காங்கிரஸ் எம்எல்சிக்கள், அவரை கீழே இறங்க கோரிக்கைவிடுத்தனர். அவர் மறுத்தார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர் கையை பிடித்து கீழே இழுத்தனர். பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர், அவரை இருக்கையில் உட்கார வைக்க முற்பட்டனர். இரு தரப்பும், தர்மேகவுடாவை பொம்மை போல இழுத்து தள்ளினர்.
தண்டவாளத்தில் உடல்
இந்த நிலையில்தான், கடூர் அருகேயுள்ள தண்டவாளத்தில் இன்று தர்மேகவுடா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று இரவு 7 மணிக்கே வீட்டை விட்டு போய்விட்டதாக குடும்பத்தார் கூறுகிறார்கள். இதனிடையே தர்மேகவுடா மறைவு குறித்து பேட்டியளித்தபோது கட்சித் தலைவரான தேவகவுடா கண்ணீர் சிந்தினார். கவுடா மகனும், எம்எல்ஏவுமான, ரேவண்ணா கூறுகையில், மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிடித்து இழுத்த சம்பவத்திற்க்கு பிறகு தர்மேகவுடா புலம்பிக் கொண்டே இருந்தார். எனவே அவர் தற்கொலை செய்திருப்பார் போல தெரிகிறது. என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.
பாஜகவுடன் கூட்டணி
மேலவையில், நடைபெற்ற தள்ளுமுள்ளு காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் உண்மை நிலைமை தெரியவரும். இதனிடையே தர்மேகவுடா மரணத்தால், மதசார்பற்ற ஜனதாதளம் தொண்டர்கள் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே பாஜகவுடன்-மஜத இனிமேல் அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைத்துக்கொள்ள வாய்ப்பு திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.