பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தம்.. பின்னணி என்ன.. பாதுகாப்புத்துறை விளக்கம்.. மக்கள் நிம்மதி
பெங்களூர்: பெங்களூரை நேற்று உலுக்கிய அந்த பயங்கர சத்தம் எங்கே இருந்து வந்தது என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில் தொடர்ந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Recommended Video
நேற்று பிற்பகல் 1 மணி 20 நிமிடம் நேரத்துக்கு திடீரென வானில் இருந்து ஒரு பயங்கர சத்தம் பெங்களூரு நகர மக்களால் உணரப்பட்டது.
அந்த சத்தம் இதற்கு முன்பாக கேட்டறியாததாக இருந்தது. இடி சத்தம் என்றாலும், ஏதாவது ஒரு ஏரியாவில் கேட்டால் பரவாயில்லை. இது அப்படியான சத்தம் இல்லை.
மேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்
கிழக்கில் அதிகம்
கிழக்கு பெங்களூரில் உள்ள கேஆர்புரம் பகுதியில் இந்த சத்தம் மிக அதிகமாக கேட்ட போதிலும், அதைவிட தொலைதூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட்பீல்டு, பன்னேர்கட்டா ரோடு, பொம்மனஹள்ளி, மடிவாளா போன்ற பகுதிகளிலும் இந்த ஒலி மக்களால் உணரப்பட்டது. அவ்வளவு ஏன், தமிழகத்தின் அண்டை நகரமான ஓசூரில் மக்கள் இந்த சத்தத்தை கேட்டு உள்ளனர். சிலர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததாக தெரிவித்தனர்.
பல விசாரணைகள்
இதனால், மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள், நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அவருக்கும் முதலில் இது என்ன விவகாரம் என்று தெரியவில்லை. போலீஸ் விசாரணையை ஆரம்பித்தது. விமான போக்குவரத்தை கண்காணிக்கும் எச்ஏஎல் அமைப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் இன்று விமானங்கள் ஏதும் இயக்கப்படவில்லை என்றனர். மற்றொரு பக்கம் மாநில பேரிடர் குழுவை விசாரித்தபோது, பெங்களூரில் பூகம்பம் கிடையாது, அதனால் ஏற்பட்ட சத்தம் இல்லை என்று தெரிவித்து விட்டனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
புயல் காரணம்
இந்த நிலையில்தான், வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று வெடிப்பு இந்த ஒலிக்கு காரணம் என்று சில தட்பவெட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தை அம்பன் புயல் நெருங்கியபோது, காற்றில் வெற்றிடம் ஏற்பட்டதால், இவ்வாறு ஒரு சத்தம் வந்திருக்கலாம் என்று அவர்கள் கூறி இருந்தனர். ஆனால் உறுதியான காரணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சகம்
இந்திய விமானப் படையின் பயிற்சி விமானம் பறந்ததால் ஏற்பட்ட சத்தம் தான் இது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் இது போல சோதனை விமானங்களை இயக்கி பார்ப்பது வழக்கம். சூப்பர் சோனிக் எனப்படும், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது சப்சோனிக் வேகத்துக்கு, விமான இயக்கத்தை குறைக்கும்போது இது போன்ற சத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறப்பது வழக்கம். நகரை விட்டு வெளியே தான் விமானம் பறந்தது. இருப்பினும் இதுபோன்ற விமானங்களில் இருந்து எழக்கூடிய ஒலி 65 முதல் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவர்களுக்கும் கேட்கக் கூடியதுதான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஏலியன்கள்
வானத்திலிருந்து ஏலியன்கள் வந்து விட்டார்களா, அல்லது குண்டு வீச்சா என்றெல்லாம் பல்வேறு வாத விவாதங்கள் இணையதளங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சகம் அளித்துள்ள இந்த விளக்கம் மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு அளித்துள்ளது. இனிமேலாவது நகரை விட்டு சற்று தள்ளி, விமானத்தை, ஓட்டி பழகுங்கள் என்று மக்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.