கர்நாடகா: திடீரென மனம் மாறும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்... தப்புகிறது குமாரசாமி அரசு?
Recommended Video
பெங்களூரு: காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திடீரென மனம் மாறுவதால் கர்நாடகா முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளின் 16 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காமல் இருந்தார்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என கூறியது. அதேநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டாக நாங்கள் சட்டசபைக்கு வரமாட்டோம் என அறிவித்தனர். இந்த நிலையில் புதிய திருப்பமாக மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி தமது ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார்.
கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் தாம் காங்கிரஸில் தொடர்ந்து நீடிப்பதாகவும் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் னிரத்னா, பசவராஜ், ஆனந்த் சிங், கே சுதாகர் ஆகிய அதிருப்தி எம்ம்.எல்.ஏக்களும் காங்கிரஸுக்கு திரும்பக் கூடும் என்கின்றன தகவல்கள்.
போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் மீண்டும் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்பக் கூட்டும் என்றே தெரிகிறது.