தேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல்
பெங்களூர்: தேன்கூட்டில் கைவைத்து விட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இனி அவை, அவரை கொட்டாமல் விடாது என்று குஷியில் இருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
பெல்லாரி மாவட்டத்திலிருந்து விஜயநகர் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்க எடியூரப்பா தயாராக இருப்பதுதான் இதற்கு காரணம்.
பெல்லாரி மாவட்டம் என்பது ரெட்டி சகோதரர்களின் கோட்டை என்று அழைக்கப்படும் இடம். அதை இரண்டாகப் பிரித்து தங்கள் கோட்டையிலிருந்து செங்கற்களை எடியூரப்பா உருவுவதை பார்த்துக்கொண்டு ரெட்டி சகோதரர்கள் சும்மா இருப்பார்களா?
கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு- 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்!
அமைச்சர் அதிருப்தி
ரெட்டி சகோதரர்களின் மிக நெருக்கமான நண்பரும், மாநில, சுகாதாரத்துறை அமைச்சருமான ஸ்ரீராமுலு இதுபற்றி கூறுகையில், "தனிப்பட்ட முறையில் பெல்லாரி மாவட்டத்தை பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேநேரம், பொதுவில் இதுதொடர்பான விமர்சனத்தை முன்வைத்து முதல்வரை தர்மசங்கட படுத்த நான் விரும்பவில்லை. அமைச்சரவை கூட்டத்தின்போது, எனது அதிருப்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
பிரிக்க விடமாட்டோம்
ரெட்டி சகோதரர்களின் ஒருவரும், எம்எல்ஏவுமான சோம சேகர் ரெட்டி, நிருபர்களிடம் பேசுகையில், எந்த விலை கொடுத்தாவது, பெல்லாரி மாவட்டத்தை பிரிப்பதை நாங்கள் தடுப்போம். முதல்வர் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது என்று வலியுறுத்துவோம். சில சுயநல தலைவர்கள் பெல்லாரி மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு தூண்டுதலாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி செய்தால் அது துக்ளக் அரசு போல மாறிவிடும்.
300 கிலோமீட்டர் நீள மாவட்டம்
சிறு, மாவட்டங்கள் சிறப்பான நிர்வாக வசதியை பெறும் என்ற வாதம் சரி கிடையாது. பெல்காம் மாவட்டத்தில் 18 தாலுகாக்கள் உள்ளன. அதை ஏன் பிரிக்கவில்லை? ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் மொத்தம் 300 கிலோமீட்டர் பரந்து விரிந்து உள்ளது. அங்கு நிர்வாக சிக்கல் எதுவும் ஏற்படவில்லையே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையில் ஒப்புதல்
கர்நாடகாவில் தற்போது 30 மாவட்டங்கள் உள்ளன. விஜயநகர் தனி மாவட்டமானால், அது, 31-வது மாவட்டமாக உதயமாகும். பெல்லாரியை சேர்ந்த தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ ஆனந்த் சிங் மற்றும் அம்மாவட்டத்தின் காம்ப்ளி தொகுதி எம்எல்ஏ கணேஷ் ஆகிய இருவரும் எடியூரப்பாவை சந்தித்து பெல்லாரி மாவட்டத்தை, இரண்டாக பிரிக்க சமீபத்தில், கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை விடுக்கப்பட்ட, அடுத்தநாளே விஜய நகரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார் எடியூரப்பா. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ரெட்டி சகோதரர்கள் கோபம்
ரெட்டி சகோதரர்கள் எதிர்ப்பு காரணமாக அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக பெரும் அமளி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதையும் மீறி எடியூரப்பா ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாலும் ரெட்டி சகோதரர்களின் கோபத்திற்கு ஆளாகி கடந்தகாலத்தை போலவே சிக்கலில் சிக்க வேண்டியிருக்கும் எடியூரப்பா. ஏனெனில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு முதல் முறையாக பதவிக்கு, வந்தபோது பெல்லாரியில் சட்ட விரோத கனிம குவாரிகளுக்கு எடியூரப்பா கடும் நெருக்கடி கொடுத்தார். ரெட்டிகளின் உற்ற தோழனாக இருந்த, பெல்லாரி மாவட்ட கலெக்டரை பணியிட மாற்றம் செய்தார். தங்களது அனுமதி இல்லாமல் இவ்வாறு முதல்வர் எடியூரப்பா செயல்பட்டது ரெட்டி சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. தங்கள் பணபலத்தால், சுமார் 60 எம்எல்ஏக்களை இழுத்துக்கொண்டு ரிசார்ட்டில் தங்கி எடியூரப்பா அரசை கவிழ்க்க, முயற்சி செய்தனர்.
முதல்வர் மாற்றம்
இதன் பிறகு சதானந்த கவுடா முதல்வராக்கப்பட்டு ரெட்டி சகோதரர்களின் கோபம் தணிக்கப்பட்டது என்பது வரலாறு. இந்த முறை ரெட்டி சகோதரர்கள் கடந்த முறையை போல பலமாக இல்லை என்ற போதிலும் பெரும்பான்மை பலத்துக்கு மிக நெருக்கமான இடத்தில் ஆட்சி நடக்க கூடிய எடியூரப்பாவுக்கு, சில எம்எல்ஏக்கள் வேறு பக்கம் போனாலும் சிக்கல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.