கர்நாடகா புதிய முதல்வர் இவரா!? பாஜக போடும் புதுக்கணக்கு.. வொர்க்அவுட் ஆகுமா புதிய பிளான்..பரபர தகவல்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். எடியூரப்பா விட்டுச்சென்ற இடத்தை சரியான நபரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதால் பாஜக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கர்நாடக முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. கடந்த சில மாதங்களாகவே எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கட்சித் தலைமையிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கேற்றவாறு கர்நாடக மாநிலத்திலேயே எடியூரப்பாவுக்கு எதிராகச் சிலர் போர்க்கொடி தூக்கினர். அவரது மகன் ஆட்சியில் அதிகம் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
கலைந்தது எடியூரப்பா அமைச்சரவை.. கர்நாடக புதிய முதல்வர் யார்? கூடுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்
தீவிர ஆலோசனை
இந்நிலையில், எடியூரப்பா நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். நான்கு முறை முதல்வராக இருந்த எடியூரப்பாவின் இடத்தை நிரப்பக்கூடிய சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை பாஜக தலைமை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் ரேசில் உள்ள நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் கலந்து கொண்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முடிவெடுக்கவில்லை
அதேநேரம் கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் உடன் பாஜகவின் கர்நாடக பொறுப்பாளர் அருண் சிங், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன் பின்னரே, முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பதில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் பாஜக தலைமை இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை என்பதால் புதிய முதல்வரை அறிவிக்கச் சற்று தாமதமாகவும் வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சிக்கலான மாநிலம் என்பதால் பல்வேறு விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே புதிய முதல்வர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
அடுத்த முதல்வர்
இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "கர்நாடக பாஜக எம்எல்ஏக்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச அதிக வாய்ப்புகள் உள்ளது. அடுத்து யாரை முதல்வராக நியமிக்கலாம் என்பது குறித்து எடியூரப்பாவிடமும் ஆலோசனை கேட்கப்படும். அதன் பிறகு மாநில பொறுப்பாளர்கள் முன்னிலையில் அடுத்த முதல்வர் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வைப்பதே முதல் பணியாக இருந்தது. இப்போது அது முடிந்ததால், அடுத்தகட்ட வேலைகள் முழு வீச்சில் நடைபெறத் தொடங்கிவிட்டது" என்றார்.
பாஜக யோசனை
கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வதில் சாதி ஒரு முக்கிய பங்கு வகிக்கும், ஏனென்றால் எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போதைய சூழலில் கர்நாடகாவில் எடியூரப்பாவை போல ஒரு லிங்காயத்து தலைவர் இல்லை. அதேநேரம் லிங்காயத்துகளின் பகையைச் சம்பாதிக்கவும் பாஜக விரும்பவில்லை. எனவே, இதை முக்கியமாகக் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும். கடந்த 2013இல் தேர்தலில் எடியூரப்பா தனிக் கட்சி அமைத்துப் போட்டியிட்டபோது, பாஜக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாதி
பாஜக மூத்த தலைவர் இது பற்றிக் கூறுகையில், "லிங்காயத்து சமூகத்தினரின் வாக்கு முக்கியம் என்றாலும், அடுத்த 10-15 ஆண்டுகளுக்குத் தேவையான திட்டத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம். கடந்த காலங்களில் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவை வைத்து சில சோதனைகளைச் செய்து பார்த்தோம். ஆனால் அது வெற்றிகரமாக அமையவில்லை. கர்நாடக மாநிலத்தில் அடுத்து முக்கியமான தேர்தல் 2023, 2024ஆம் ஆண்டுகளில் தான் நடைபெறுகிறது. எனவே, புதிய முயற்சிகளைச் சோதனை செய்து பார்க்க எங்களுக்கு போதிய நேரம் உள்ளது" என்றார்.
நான்கு முக்கிய சமூகங்கள்
இப்போது கர்நாடக மாநிலத்தின் நான்கு முக்கிய சமூகங்களான தலித், லிங்காயத்து, வோக்கலிகா மற்றும் குருபா சமூகத்திலிருந்து ஒருவரை பாஜக தலைமை தேர்வு செய்து வைத்துள்ளது. அவர்களில் ஒருவரே முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அவர் எடியூரப்பா விட்டுச் சென்ற இடத்தை நிரப்பக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதே ஒரு பிரச்சினை.
முதல்வர் ரேஸ்
கர்நாடக மக்கள்தொகையில் 17% உள்ள லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ரேசில் அமித் ஷாவின் குட்புக்கில் உள்ள தற்போது சுரங்க மற்றும் புவியியல் அமைச்சராக உள்ள முருகேஷ் நிரானி, எடியூரப்பாவின் அரசியல் எதிராக அறியப்பட்ட அரவிந்த் பெல்லட், முன்னாள் கர்நாடக முதல்வர் ஆஸ்ஆர் பொம்மையின் மகனும் மாநில உள் துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை மற்றும் வலுவான ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பசங்கவுடா பாட்டீல் யட்னல் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
மத்திய அமைச்சர்
அதேபோல இப்போது துணை முதல்வராக இருக்கும் மற்றொரு லிங்காயத்து தலைவரான லக்ஷ்மன் சவாடியும் ஆப்ஷனில் தான் உள்ளார். இவர்கள் போகப் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரும் கர்நாடக முதல்வர் ரேசில் உள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவரே கர்நாடக முதல்வர் பதவியை அலங்கரிக்க வாய்ப்பு உள்ளது.
மோடி -அமித் ஷா இணை
ஆனால் நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. மோடி - அமித் ஷா இணை என்றும் ஆச்சரியங்களுக்குப் பெயர்போனது. எனவே, எடியூரப்பா இடத்தை நிரப்ப வேறு ஒரு புதிய இளம் தலைவரை முதல்வராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அவரது பணி நிச்சயம் எளிதாக இருக்காது. மாநிலத்தில் இருக்கும் அதிருப்தி, மோசமான உள்கட்சி பூசல் எனப் பல பிரச்சினைகள் உள்ளது. அதேபோல 2023 சட்டசபைத் தேர்தலுக்கு முன், லிங்காயத்து சமூகத்தின் ஆதரவை முழுமையாகப் பெற வேண்டும். இப்படிப் பல முனைகளிலிருந்தும் சிக்கல்கள் வரிசை கட்டி நிற்பதால், புதிய முதல்வர் அதை எப்படிக் கையாளப் போகிறார் என்பது பெரும் கேள்வியாகவே உருவெடுத்துள்ளது.