அரசு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகாவில் நாளை பந்த்
பெங்களூரு: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி கன்னட சங்கங்கள் நாளை முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கை 1984-ல் பரிந்துரைத்தது. பல ஆண்டுகளாக இப்பரிந்துரைகள் கிடப்பில் இருக்கின்றன என்பது கன்னட சங்கங்களின் குற்றச்சாட்டு.
சரோஜினி மகிஷி அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாளை கர்நாடகா தழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு கன்னட சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு பல்வேறு தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. கர்நாடகா போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாகவும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கர்நாடகா மாநில அரசும் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.