காவிரி கரையில் கொட்டிக் கிடக்கும் லித்தியம்.. எலக்ட்ரிக் வாகன எரிபொருள்.. ஆய்வில் சூப்பர் தகவல்
பெங்களூர்: எலக்ட்ரிக் கார்களை இயக்க பயன்படுத்தப்படும் லித்தியம் இருப்பு, காவிரி நதிக்கு கொஞ்ச தூரத்தில், கொட்டிக் கிடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் அணுசக்தி ஆணையத்தின் ஒரு பிரிவான அணு கனிம இயக்குநரகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பெங்களூரிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள மண்டியா நகரத்தின் அருகே நடத்திய ஒரு ஆய்வில் இந்த இன்பத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம், தங்கம் வெட்டி எடுக்கப்பட்டதே அதே கர்நாடக மாநிலத்தில்தான் இப்போது லித்தியமும் கிடைத்துள்ளது.
அங்குள்ள நிலப்பரப்பில் 14,100 டன் லித்தியம் இருப்பு இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். இது காவிரி பாயக்கூடிய பிராந்தியமாகும்.
சீனாவில் குலைநடுங்க வைக்கும் கொரோனா உயிரிழப்பு.. 2 ஆயிரத்தை தாண்டியது!
அரிய உலோகம்
லித்தியம் ஒரு அரிய உலோகம், இது மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செல்போன்களுக்கான பேட்டரிகளிலும் பயன்படுத்தப்படும். இந்திய அறிவியல் நிறுவன இன்ஸ்டிடியூட் பேட்டரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் என்.முனிச்சந்திரய்யா இதுபற்றி கூறுகையில், "தற்போதைய தரவுகளின்படி, 0.5 கிமீ x 5 கிமீ பரப்பளவில் சுமார் 30,300 டன்களாக கிடைக்கக்கூடிய LI 2O உள்ளது. இது சுமார் 14,100 டன் லித்தியம் உலோகத்திற்கு இணையானது" என்று தெரிவித்தார்.
பிற நாடுகள்
ஆனால், பெரிய உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடும்போது மண்டியாவில் காணப்படும் லித்தியம் மிகக் குறைவு. "சிலியில் 8.6 மில்லியன் டன், ஆஸ்திரேலியாவில் 2.8 மில்லியன் டன், அர்ஜென்டினாவில் 1.7 மில்லியன் டன் மற்றும் போர்ச்சுகலில் 60,000 டன் லித்தியம் கிடைக்கிறது. இவைதான் உலகின் மிகப்பெரிய லித்தியம் உற்பத்தி நாடுகள். அவற்றோடு ஒப்பிடுகையில், நம்மிடம் உள்ள 14,100 டன் லித்தியம் ரொம்ப அதிகமல்ல" என்றும் முனிச்சந்திரய்யா கூறினார்.
இறக்குமதி
இந்தியா தற்போது அதன் அனைத்து லித்தியம் தேவைகளையும் இறக்குமதி மூலமே ஈடு செய்கிறது செய்கிறது. 2019ம் நிதியாண்டில் 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள லித்தியம் பேட்டரிகளை இறக்குமதி செய்தது நமது நாடு. இது 2017ம் நிதியாண்டில் 384 மில்லியன் டாலராக இருந்தது. பிப்ரவரி 2 ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, 2019ம் ஆண்டு நவம்பர் வரையிலான 8 மாதங்களில், நாட்டின் லித்தியம் பேட்டரி இருப்பு மொத்தம் 929 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கானவை.
அரசு நடவடிக்கை
இந்தியாவுக்கு அதன் எரிசக்தி தேவைகளுக்கு லித்தியம் தேவைப்பட்டாலும், லித்தியத்தின் உள்ளூர் இருப்புக்களை கண்டறிவதற்கு இதுவரை எந்த விரிவான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அரசு, இந்தியாவில் மாசற்ற எரிசக்தி வாகனங்களை ஊக்குவிக்க கடுமையாக முயன்று வருகிறது. இந்தியாவை மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான 1.4 பில்லியன் டாலர் திட்டம் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலையில், லித்தியம் இருப்பு தொடர்பாக வெளியாகியுள்ள இந்த தகவல் மகிழ்ச்சியளிக்கக் கூடியது.