எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் காலம் தாழ்த்துவது தவறு.. எடியூரப்பா புகார்
பெங்களூரு: பரபரக்கும் கர்நாடக அரசியல் களத்தில் எப்போது என்ன நடக்கும் என, நாடே ஆவலாக பார்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 எம்எல்ஏ-க்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் உடனடியாக ஏற்று கொள்ளாதது சரியல்ல என்று, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தை ஆட்சி செய்து வரும் கூட்டணி அரசின் மீது அதிருப்தி தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் ஒன்று கூடி மும்பை சென்றனர்.
இந்நிலையில் இதில் சுமார் 10 எம்எல்ஏ-க்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் கொடுக்கவில்லை, எனவே அந்த கடிதங்களை ஏற்க முடியாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் திட்டவட்டமாக கூறினார்.
சபாநாயகரின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்கள் விருப்பம் இருந்தால் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுக்கலாம். அதற்கு இன்று மாலை 6 மணி வரை கெடு என கூறியது.
ராஜினாமா மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தும் சபாநாயகர்.. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இப்படி செய்வார்களா?
இதனையடுத்து சட்டசிக்கல் ஏதும் வராமல் இருக்க மும்பையில் தங்கியிருந்த 10 எம்எல்ஏ-க்கள் விழுந்தடித்து கொண்டு விமானம் ஏறி, மாலை கர்நாடகா வந்து சேர்ந்தனர். பின்னர் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமாவை ஏற்க கடிதம் அளித்தனர். ஆனால் சபாயாயகரோ, இந்த விவகாரத்தில் மின்னல் வேகத்தில் முடிவெடுக்க முடியாது என கைவிரித்து விட்டார்.
இதனையடுத்து பாஜக தரப்பு மற்றும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, 10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை உடனடியாக சபாநாயகர் ஏற்காதது தவறு. இதில் முடிவெடுக்க காலம்தாழ்த்துவது சரியல்ல. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 10 பேரும் மீண்டும் மும்பைக்கே செல்கின்றனர்.
எனினும் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்புக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்.