சரமாரியாக அடித்து, உதைத்து கொலை மிரட்டல்... காங்., எம்.எல்.ஏ.கணேஷ்-க்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூரு: துப்பாக்கியை எடுத்து கொன்று விடுவதாக மிரட்டிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சக எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணேஷ் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆபரேஷன் தாமரை என்ற திட்டத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. மேலும், இரண்டு சுயேட்சை எம்.எல். ஏக்கள் காங்கிரஸ்க்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.
ஆனந்த் சிங் மீது தாக்குதல்
இதனையடுத்து, ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 19-ந் தேதி இரவு ரெசார்ட்டில் வைத்து பல்லாரி மாவட்ட எம்.எல். ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, கம்பளி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆனந்த்சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது
கொலை மிரட்டல்
இந்தநிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆன்ந்த் சிங்கிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உதவி செய்யவில்லை என்று கூறி கணேஷ் தகராறில் ஈடுபட்டார். மேலும், தனது உறவினர் மகனை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். பூந்தொட்டி மற்றும் தடியால் தலையில் பலமாக தாக்கினார். கையால் முகத்தில் குத்தினார். கீழே தள்ளி கொலைவெறியுடன் மிதித்தார் என்றார்.
சக எம்.எல்.ஏ.க்கள் காப்பற்றினர்
அத்துடன் துப்பாக்கியை எடுத்து இங்கேயே கொன்று விடுவதாகவும் மிரட்டினார். அப்போது, அமைச்சர் துகாராம், எம்.எல்.ஏ.க்களான ரகுமூர்த்தி, ராமப்பா, தன்வீர்சேட் ஆகியோர் காப்பாற்றினர். இல்லாவிட்டால் அவர் என்னை கொன்று இருப்பார் என்று ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தனிப்படை அமைப்பு
மேலும் கணேஷ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.