சசிகலாவுக்கு சலுகை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- ரூபாவின் அடுத்த அதிரடி
பெங்களூர்: சசிகலாவுக்கு சலுகை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பெங்களூர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை புகார் கூறினார்.
அதில் சசிகலாவுக்கு சலுகைகளை வழங்க கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். மேலும் சிறை விதிகளை மீறி சசிகலாவுக்கு 4 அறைகள் ஒதுக்கப்பட்டன.
பார்வையாளர்களை சந்திக்க அறை
அவர்களுக்கு தனி சமையலறையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் பார்வையாளர்களை சந்திக்கும் எண்ணிக்கையும் மற்ற கைதிகளை காட்டிலும் அதிக அளவில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டது. சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்றுவிட்டு வெளியே சென்று வருவது போன்ற வீடியோவையும் ரூபா கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், சிறைத்துறை டிஜிபிக்கும் அனுப்பி இருந்தார்.
வினய்குமார் குழு
இதனிடையே ரூபா சிறைத் துறையிலிருந்து போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார். மேலும் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்தது.
அறிக்கை
இந்த குழு பரப்பன அக்ரஹார சிறையில் விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த குழுவினர் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதாவது சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது என அந்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தண்டிக்கப்பட வேண்டும்
இதுகுறித்து சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா கூறுகையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டது குறித்த என்னுடைய குற்றச்சாட்டு உண்மை என அறிக்கை வெளிவந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து தந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேல்முறையீடு
வினய் குமார் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அறிய சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. தகவல் அறியும் சட்டத்தில் அறிக்கை குறித்து கேட்டபோதெல்லாம் பதில் தர மறுக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டுக்கு சென்று அறிக்கையை பெற்றேன் என்றார் ரூபா.