எல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு!
பெங்களூர்: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகரித்தால், நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள், பாஜகவுடன் சமரசமாகப் போக முன்வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சரான ரோஷன் பெய்க் கூறியிருப்பது கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் ரோஷன் பெய்க். சமீப காலமாக கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் உள்ளார். கட்சியிலிருந்து விலகப் போவதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த நிலையில் முஸ்லீம்கள், பாஜகவுடன் கை கோர்க்க வேண்டும் என்று பெய்க் பேசியுள்ளார்.
இதுகுறித்து ரோஷன் பெய்க் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க?... ஓ.பி.எஸ் பதில் இது தான்
நிலைமைக்கு ஏற்ப மாறுங்க
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நான் முஸ்லீம் சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது, நிலைமைக்கு ஏற்ப மாறி விடுங்கள். அதற்கு முன்வர வேண்டும்.
தேவைன்னா பாஜக
தேவைப்பட்டால் பாஜகவுடன் கை கோர்க்கவும் முஸ்லீம்கள் தயங்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஒரே ஒரு முஸ்லீமுக்குத்தான் சீட் கொடுத்தது. எனவே பாஜகவுடன் கை கோர்ப்பதில் தவறே இல்லை.
காங்கிரஸால் பலன் இல்லை
நாம் ஒரு கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருக்க முடியாது. கர்நாடகத்தில் முஸ்லீம்களை எந்த கட்டத்தில் வைத்திருக்கிறது காங்கிரஸ் என்று பாருங்கள். ஒரு சீட்டுக்குத்தான் நாம் பயன்பட வேண்டுமா.
விலகுவேன்
தேவைப்பட்டால் நான் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுப்பேன். கட்சியில் முஸ்லீம்கள் தொடர்ந்து அவமானத்தை சந்தித்து வருகின்றனர். நாங்கள் கெளரவமாக வாழ விரும்புகிறோம். எங்கு மரியாதை கிடைக்குமோ அங்கு வாழவே விரும்புகிறோம்.
எங்கு அன்பு கிடைக்குமோ அங்கு
எங்களிடம் யார் அன்பைக் காட்டுகிறார்களோ, பாசம் காட்டுகிறார்களோ அவர்களுடன் இணைந்திருக்க விரும்புகிறோம். கர்நாடகத்தில் தற்போது முஸ்லீம்களின் நிலைமை மோசமாக இருக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவின் மோசமான பிரச்சாரம்தான் காரணம். சித்தராமையும் இன்னொரு காரணம் என்றார் ரோஷன் பெய்க்.
ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை, பாஜக தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்போது ரோஷன் பெய்க்கும் கிளம்பப் போகிறார்.