கட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதல்வர் குமாரசாமியால், கர்நாடக அரசுக்கு செலவு ரூ.1 கோடி!
Recommended Video
பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி, கிராமங்களில் தங்கி, கட்டாந்தரையில் படுத்து உறங்கினார் என்று சமீபத்தில் செய்திகளை பார்த்திருப்போம். ஆனால், அவர் தரையில் படுத்திருந்ததால், கர்நாடக அரசுக்கு ரூ.1 கோடி செலவாகியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா!
கர்நாடக முதல்வர் குமாரசாமி, கிராம தரிசனம் என்ற பெயரில், மாநிலத்திள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அவர்களின் கஷ்ட, நஷ்டங்களை நேரில் பார்த்து, அங்கேயே ஒரு நாள் இரவு தங்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
தனது முந்தைய ஆட்சி காலத்தில் இப்படியான ஒரு திட்டத்தை செயல்படுத்தியதால்தான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உயர்ந்தது குமாரசாமிக்கு. எனவே கட்சியை வளர்க்க இப்படி ஒரு அதிரடி முடிவுக்கு அவர் வந்தார்.
பள்ளியில் படுக்கை
கிராம தரிசனம் நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக, சில தினங்கள் முன்பாக, வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி மாவட்டம், சந்திரக்கி கிராமத்தில் தங்கியிருந்தார். அன்றைய தினம் அவர் அரசு பள்ளியில், கட்டாந்தரையில் படுத்திருந்த புகைப்படம் நாடு முழுக்க வைரலானது.
ரூ.1 கோடி செலவு
ஆனால், குமாரசாமியின், இந்த கிராம விசிட்டுக்கு ரூ.1 கோடி வரை செலவாகியுள்ளதாக, சில முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், தற்காலிக ஆபீஸ்கள் அமைத்தல், மக்களிடம் மனுக்களை பெறும் வசதி போன்றவற்றை ஏற்படுத்த ரூ.25 லட்சமும், முதல்வரை பார்த்து குறைகளை சொல்ல வந்த யாதகிரி மாவட்டம் முழுவதிலுமிருந்து வருகை தந்த மக்களுக்கு சாப்பாடுக்கு செலவிட்ட வகையில் ரூ.25 லட்சமும் அரசு கஜானாவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பல விஐபிகள்
மேலும் 50 லட்சம் ரூபாய், மேடை அமைத்தல் உட்பட வேறு பல விஷயங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. குமாரசாமியுடன் அதிக எண்ணிக்கையில், அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் கிராம தரிசனத்திற்கு சென்றது, இதற்கு ஒரு முக்கிய காரணம். என்னதான், பஞ்சு மெத்தை வேண்டாம், பாய் மட்டும் போதும் என்று குமாரசாமி கூறினாலும், இதுபோன்ற உதிரி செலவுகளே ரூ.1 கோடியை எட்டிவிட்டதை என்னவென்று சொல்வது
முந்தைய ஆட்சி காலம்
2006ம் ஆண்டில், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். அந்த காலகட்டத்தில், இதுபோல கிராம தரிசனம் நிகழ்ச்சியை, குமாரசாமி நிகழ்த்தினார். இதன்பிறகு, இப்போதுதான் மீண்டும், அவர் கிராம தரிசனம் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளார்.