வீடுகள் 'குறிக்கப்படுகிறது..' ஹிட்லரின் 'நாசி' கொள்கையை ஆர்எஸ்எஸ் கையிலெடுக்கிறது.. குமாரசாமி பகீர்
பெங்களூர்: அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் வீடுகளை தனியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து வைப்பதாகவும், ஜெர்மனியின் நாசிக் கட்சி பின்பற்றிய அதே பாணியை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்பற்றுவதாகவும், கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான எச்டி குமாரசாமி பெறும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் அடிக்கல் நாட்டு விழா, சில மாதங்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது.
இதையடுத்து, நாடு முழுக்க ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டும் பணிகளில் இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டாயம் நிதியளிக்க வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்கள் வலியுறுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது.
பணம் அளிப்பவர்கள் வீடுகள்
இந்த நிலையில்தான், குமாரசாமி டுவிட்டர் பதிவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூறி உள்ளதை பாருங்கள்: ராமர் கோவில் கட்டுவதற்கு பணம் அளிப்பவர்கள் வீடுகளில் ஒரு மாதிரியும், கொடுக்காதவர்கள் வீடுகளில் வேறு மாதிரியும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் குறிப்பு எழுதி வைத்து விட்டுச் செல்கிறார்கள்.
ஹிட்லர் பதவிக் காலம்
ஜெர்மனியில் நாசிக் கட்சியினர் இதேபோலத்தான் ஹிட்லர் பதவிக் காலத்தின் போது செய்தனர். ஹிட்லர் பதவி காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைப் பறி கொடுத்தனர். அதேபோன்ற நடைமுறையை ஆர்எஸ்எஸ் பின்பற்றுவதை பார்க்கும்போது நமது நாடு எதை நோக்கி செல்கிறது என்ற அச்சம் எழுகிறது.
நாசி கட்சி
ஜெர்மனியின் நாசி கட்சி எப்போது துவங்கியதோ, அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பிறந்தது. நாசி கட்சி எந்த மாதிரி திட்டங்களை கையில் எடுத்ததோ அதேபோன்ற திட்டங்களை ஆர்எஸ்எஸ் செயல்படுத்தினால் என்ன நடக்கும் என்பது கவலையளிக்கிறது. நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை பார்க்கும்போது இந்த சந்தேகம் அதிகரிக்கிறது.
அறிவிக்கப்படாத அவசரநிலை
தற்போது நமது நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக சொல்வதற்கு முடியவில்லை. ஊடகங்களின் சுதந்திரத் தன்மை வருங்காலங்களில் முழுமையாக பறி போகும் நிலைமை உருவாகியுள்ளது. அரசு சொல்லும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் தெரிவித்தால் நிலைமை என்ன ஆகும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.
ஆர்எஸ்எஸ் பதிலளிக்க மறுப்பு
தற்போது உள்ள நிலவரத்தை பார்த்தால், நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற அச்சம் இருக்கிறது. இவ்வாறு குமாரசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். இதுபற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீடியா பொறுப்பாளர் பிரதீபிடம், நிருபர்கள் கேட்டபோது, குமாரசாமியின் இந்த கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதால், பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.