கொரோனா காலத்தில் விமானக் கண்காட்சி... கண்கவர் ஹெலிகாப்டர் நிகழ்ச்சிகள்... அசத்தும் பாதுகாப்பு படை
பெங்களூரு: அடுத்த மாதம் நடைபெறும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் சாரங் மற்றும் சூர்யா கிரண் ஹெலிகாப்டர் குழுக்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் பெங்களூருவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா என்ற பெயரில் விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானப் படைகளும் தங்களது அதிநவீன விமானங்களைக் காட்சிப்படுத்துவார்கள்.
இந்தாண்டு ஏரோ இந்தியா 2021 நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் விமானக் கண்காட்சி இதுவாகும். இருப்பினும், இதுவரை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளன.
இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் தொடங்கி வைப்பாரா என்பது குறித்த தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், இந்த விமான கண்காட்சியில் நடைபெறும் சாகச நிகழ்வுகளைக் காணக் குறைந்த அளவு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் சாகச குழுக்களான சாரங் மற்றும் சூர்யா கிரண் குழுக்களின் சாகச நிகழ்வுகள் இதில் இடம்பெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் இந்த விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் போயிங் சினூக்ஸ் மற்றும் ஏ.எச் -64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் முதல்முறையாகப் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,தொடக்க நாளில் மிக், குளோப்மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு விமானங்களின் சாகச நிகழ்வுகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.