சிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்
Recommended Video
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூர் சிறைச்சாலையில் விதிகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மைதான் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் வழங்கிய அறிக்கையின் அம்சங்கள் மீண்டும் தற்போது லீக் ஆகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் உள்ள பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் அந்த சிறைச்சாலையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத் துறை அதிகாரியாக இருந்த ரூபா என்ற பெண், ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார்.
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்
சிசிடிவி காட்சிகள்
இந்த தகவல் வெளியான நேரத்தில், சசிகலா போன்ற உருவத்தில் இருக்கும் ஒருவர் சிறைக்கு வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு மீண்டும் சிறைக்குள் வருவது போன்ற சிசிடிவி காட்சிகள், டிவி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி வினய் குமார், தலைமையிலான ஒரு குழுவை அப்போதைய, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைத்தது.
பணியிடமாற்றம்
மேலும் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தவர் ரூபா மற்றும் சசிகலாவுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா ராவ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வினய்குமார் தனது அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்த நிலையில் அந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் சில ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
வினய்குமார் அறிக்கை
அந்த செய்தியில், சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் செய்யப் பட்டது உண்மைதான் என்று வினய்குமார் அறிக்கையில் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சசிகலா ஷாப்பிங் செல்வது போல வெளியான வீடியோவின், உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக, கேரள தடயவியல் ஆய்வகத்திற்கு பெங்களூரு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதே போல் வினய்குமார் அறிக்கை தகவல்களும், இதுவரை 'அதிகாரப்பூர்வமாக' வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த அறிக்கையின் அம்சங்கள் மீண்டும் ஊடகங்களுக்கு இன்று கசிய விடப்பட்டுள்ளன.
தனி சமையல்
அந்த அறிக்கையில், சசிகலாவுக்காக தனிப்பட்ட சிறப்பு சமையல் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஷர் குக்கர் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சிறைத்துறை அதிகாரி சத்தியநாராயணராவுக்கு, 2 கோடி ரூபாய் சசிகலா தரப்பில் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது, இரவு உடையில் சசிகலா சிறையில் இருந்து வெளியேறி உள்ளார் என்றெல்லாம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுதலைக்கு பிரச்சினையா
இந்த தகவல்கள் ஏற்கனவே ஜனவரிமாதம் மீடியாக்களில் கசிந்தவை என்றாலும் இப்போது ஏன் மீண்டும் வெளியாகியுள்ளன என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. நன்னடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி சசிகலாவை விரைவில் விடுதலை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசியல் மூவ் இருப்பதாகவும், சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், வினய் குமார் அறிக்கை விவரம் தற்போது மீண்டும் டிவி மீடியாக்களில், வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.