நுரையீரலில் கடும் தொற்று.. தனியார் மருத்துவமனைக்கு ஷிப்ட்? நீதிமன்றம் செல்லும் சசிகலா குடும்பத்தினர்
பெங்களூர்: பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை இன்று அணுக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் சசிகலா. ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலையாக இருந்தது.
இந்த நிலையில் மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் பெங்களூர் சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆக்சிஜன் அளவு
அங்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா இல்லை என்று முடிவுகள் வெளியாகி இருந்தன. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 79 என்ற அளவுக்கு மிகவும் குறைந்து காணப்பட்டது. மற்றும் பிற அறிகுறிகளையும் வைத்து பார்க்கும்போது சிடி ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது நல்லது என்று சசிகலா குடும்பத்தினர் கருதினர்.
சிடி ஸ்கேன்
அவரது குடும்பத்தில் உள்ள மருத்துவ படிப்பு படித்த உறுப்பினர்கள் சசிகலாவை சந்தித்து அவரது உடல்நிலையை பார்த்தபிறகு கொரோனா இருக்கலாம் என சந்தேகித்தனர். பவுரிங் அரசு மருத்துவர்களை, சிடி ஸ்கேன் மூலம் இதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி வந்தனர். ஆனால், பவுரிங் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மிஷின் ரிப்பேர் ஆனதால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது கொரோனா இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆக்சிஜன்
இது குறித்து மருத்துவமனை வட்டாரங்களிடம் பேசியபோது, நுரையீரலில் கடுமையான பாதிப்பு நிலவுகிறது. கடும் சுவாச பிரச்சனை என்று அழைக்கப்படக்கூடிய சாரி (SARI) பாதிப்பால் அவதிப்படுகிறார் சசிகலா. நிமோனியா பாதிப்பு உள்ளது. எனவேதான் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்காக இன்சுலின் மற்றும் மேலும் சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று தெரிவித்தனர்.
நீதிமன்றத்தை நாடும் சசிகலா குடும்பம்
இதனிடையே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா குடும்பத்தினர் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். அந்த மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டால் சசிகலா தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா, அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்குமா என்பது தெரிய வரும்.