சசிகலா டிபன் சாப்பிட்டார்.. நல்லாருக்கார்.. பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் தகவல்!
சசிகலா காலை உணவருந்தினார் என்றும் அவர் 3 நாட்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் பெங்களூரு பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் கூறியுள்ளார்.
பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் கூறியுள்ளார். சசிகலா காலை உணவு சாப்பிட்டார் என்றும் மூன்று நாட்களுக்கு அவர் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சசிகலாவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ய விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சசிகலா. விடுதலையாகி வீட்டுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உறவினர்கள் கவலையடைந்தனர். ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை டீன் மனோஜ் கூறியுள்ளார்.
கிளம்பியது சர்ச்சை.. "சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி
செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ், சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் காலை உணவு அருந்தினார்.எழுந்து நடந்தார் என்று கூறினார். மூன்று நாட்களுக்கு அவர் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருப்பார்.
சசிகலா ஐசியூ நோயாளி அல்ல என்று கூறிய மனோஜ், கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்த பிறகே உடல்நிலை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.