புயலென சுழன்றடித்த "சசிகலா".. டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்!
பெங்களூரு : உடல் நலக்குறைவு காரணமாக சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டுவிட்டர் டிரெண்டிங்கில் சசிகலா முதலிடம் பிடித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017 ம் ஆண்டு, பிப்ரவரி 15 ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
|
சிறைவாசம்
4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27 ம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென சசிகலாவிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
|
கொரோனா பாதிப்பு இல்லை
அவருக்கு கொரோனா இல்லை எனவும், அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை எனவும், நலமுடன் இருப்பதாகவும் அம்மா முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கூறி உள்ளார். இதற்கிடையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்று தெரியவில்லை.
|
சிறைக்குப் போய் வருவாரா
அதேசமயம், மருத்துவமனையில் இருக்கும் சசிகலா மீண்டும் சிறைக்கு செல்லாமல் நேரடியாக விடுதலையாகி சென்னை வருவார் என ஒரு தகவலும் பரவி வருகிறது. இதற்கிடையில் சசிகலா என்ற ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டு அது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது. இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி, முதலிடம் பிடித்துள்ளது.
|
வேதனையில் தொண்டர்கள்
இதில் கருத்து பதிவிட்டுள்ள சிலர், விடுதலை ஆக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் சசிகலாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், சசிகலா டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி, சசிகலாவின் உடல்நிலையை இந்தியாவே உற்று கவனிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
|
அதிகாரம் அவரைச் சுற்றி
இதுவரை 8000 க்கும் அதிகமானவர்கள் சசிகலா உடல்நிலை குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான செய்திகளும் அதிகமானவர்களால் பகிரப்பட்டுள்ளது. என்ன சொல்லுங்க, ஜெயலலிதா இருந்தவரை அவரைச் சுற்றித்தான் தமிழக அரசியல் ஓடியது.. இனி சசிகலாவை வைத்து ஓடும் போல.