சசிகலா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.. லேசான மூச்சுத்திணறலால் பரபரப்பு
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெங்களூரு போரிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, லேசான மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
Recommended Video
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்கள்.
அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார்கள்.
சசிகலா மட்டும் வரும் 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக அண்மையில் அறிவித்தது. இளவரசி பிப்ரவரி 5ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. சுதகாரன் விடுதலையாகும் நாள் குறித்து தெரியவரவில்லை.
உடல்நலக்குறைவு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா இன்னும் சில நாட்களில் விடுதலையாக உள்ள சூழலில், நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள்.
சக்கர நாற்காலியில் சசிகலா
இதையடுத்து, சசிகலாவை உடனடியாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் சென்றார்கள். சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியான பின்னரே அவருக்கு உடல் நிலை பாதிப்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது
ஆக்ஸிஜன் பற்றாக்குறை
இதனிடையே மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னையுடன், சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவுக்கு ஆன்ட்டிபயாடிக் மற்றும் பிராண வாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அத்துடன் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கையும் வெளியிட்டது.
தீவிர சிகிச்சை
இதனிடையே சசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமமுகவினர் பிரார்த்தனை
சசிகலா இன்னும் சில நாளில் விடுதலையாகி தமிழகம் திரும்ப இருந்த சூழலில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பிரிவில் சிசிச்சை பெற்று வருவது அவரது உறவினர்களை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. அமமுக தொண்டர்கள் பலரும் சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.