சசிகலாவிற்கு என்ன ஆச்சு... தவிக்கும் உறவுகள் சிகிச்சையிலும் மெத்தனம் என குற்றச்சாட்டு
சிறையில் இருந்து இன்னும் சில நாட்களில் விடுதலையாகி வந்து விடுவார் என்று சசிகலாவை வரவேற்க தயாராக இருந்த உறவினர்கள் எல்லோரும் இப்போது கவலையடைந்திருக்கின்றனர்.
பெங்களூரு: சசிகலாவை பார்க்க விடவில்லை, சிகிச்சை அளிக்கும் முறையும் சரியில்லை என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சசிகலாவிற்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களை பார்க்க விட மறுப்பதாகவும் அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா நான்கு ஆண்டுகாலம் தண்டனை முடிந்து வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாவார் என்று அறிவிக்கப்பட்டது.
சசிகலாவை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம். இதற்காக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் டிடிவி தினகரன்.
தீவிர சிகிச்சையில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா இல்லை.. RT-PCR பரிசோதனையிலும் உறுதி
மூச்சுத்திணறல்
இந்த சூழ்நிலையில்தான சசிகலாவிற்கு நேற்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக அவரை பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுவதாக நேற்றிரவு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் குவிந்த உறவுகள்
உடல்நல பாதிப்பு குறித்த செய்தி அறிந்த உடன் சசிகலாவின் உறவினர்கள் பெங்களூரு விரைந்தனர். சசிகலாவின் உறவினர்கள் விவேக், ஜெயானந்த், உதவியாளர் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். எனினும் சசிகலாவை சந்திக்க சிறைத்துறை யாரையும் அனுமதிக்கவில்லை. நடைமுறையை காரணம் காட்டியே சிறை நிர்வாகமும், மருத்துவமனையும் காலம் கடத்துகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ள நிலையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த் குற்றம் சாட்டியுள்ளார். சசிகலாவின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வழங்கவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று இல்லை
நேற்று மாலை மூச்சுத் திணறுவது ஏற்பட்ட பிறகுதான் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பது உறவினர்களின் புகார். ரேபிட் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது ஆர்.டிபி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது.
சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும்
சிறையிலிருந்த சசிகலாவிற்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு சாதாரண எக்ஸ்ரே மட்டும் எடுத்து பார்த்திருக்கிறார்கள். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தால்தான் உடல்நிலை குறித்து தெரியவரும் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார். சசிகலாவிற்கு சி.டி. ஸ்கேன் எடுக்க அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார்.
ஜனவரி 27ல் விடுதலையாவாரா?
சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும் என்றும் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் அவருக்கு சிகிச்சையை தாமதப்படுத்துகின்றனர் என்றும் உறவினர்களின் புகார் கூறியுள்ளார். சசிகலா உடல்நிலை குணமடைந்து குறித்த தேதியில் விடுதலையாக வேண்டும் என்பதே உறவினர்களின் வேண்டுதலாக உள்ளது.