சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் - கொரோனா தாக்கம் குறைகிறது- விக்டோரியா மருத்துவமனை
பெங்களூரு: சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதாகவும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது 4 ஆண்டுகால சிறைவாசம் வரும் 27-ந் தேதியுடன் முடிவடைந்து விடுதலையாக உள்ளனர்.
சசிகலா விடுதலை
சசிகலா விடுதலையை தொடர்ந்து தமிழக அரசியலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
சசிகலாவுக்கு கொரோனா
பின்னர் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதியானது. அவருக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்
இந்நிலையில் சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் 97% ஆக்சிஜன் அளவு உள்ளது; ரத்தம் அழுத்தம் சீராக உள்ளது என்றும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசிக்கு சிகிச்சை
அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது என்றும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சசிகலா கண்காணிப்பில் இருந்து வருகிறார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சசிகலாவின் உறவினர் இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கும் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.