சசிகலா நலமாக இருக்கிறார்... அச்சமடையத் தேவையில்லை என்கிறார் டிடிவி தினகரன்
சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு: சசிகலாவின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா நான்கு ஆண்டுகாலம் தண்டனை முடிந்து வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாவார் என்று அறிவிக்கப்பட்டது.
சசிகலாவை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம். இதற்காக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் டிடிவி தினகரன்.
இந்த சூழ்நிலையில்தான சசிகலாவிற்கு நேற்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக அவரை
பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுவதாக நேற்றிரவு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
சசிகலாவுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருக்கிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக உள்ளது. முதல்கட்ட சோதனைகளில் எந்த தீவிரமான உடல் பிரச்சனையும் அவருக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. 24
மணி நேர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட நிலை குறித்து கூற முடியும் என்று கூறியுள்ளார் மருத்துவமனை டீன் மனோஜ் குமார்.
சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறித்து அவரது உறவினர்கள் விவேக், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு சிறை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் பௌரிங் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ''சசிகலாவுக்கு சாதாரண காய்ச்சல்தான். அவர் இப்போது நலமாக இருப்பதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்ததாக கூறினார்.
சசிகலாவின் உறவினர்கள் விவேக், ஜெயானந்த், உதவியாளர் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். எனினும் சசிகலாவை சந்திக்க சிறைத்துறை யாரையும் அனுமதிக்கவில்லை. நடைமுறையை காரணம் காட்டியே சிறை நிர்வாகமும், மருத்துவமனையும் காலம் கடத்துகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய டிவி தினகரன், சசிகலா உடல் நலம் சீராக உள்ளதாக கூறினார். அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சசிகலா உடல் நலம் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று அவரது சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டிய நிலையில் நல்ல முறையில் இருப்பதாக கூறியுள்ளார் டிடிவி தினகரன்.