விடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்! தமிழக மக்கள் பற்றி உருக்கம்
பெங்களூர்: கொரோனாவால் தமிழக மக்கள் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையளிப்பதாக உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் பெங்களூர் சிறையிலுள்ள சசிகலா.
மேலும் தனது விடுதலைக்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞருக்கு அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் சசிகலா.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா.
சசிகலா ரிலீஸ்
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் விரைவில் ரிலீஸ் செய்யப்படுவார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நன்னடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அவர் இவ்வாண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
அபராத தொகை
அதேநேரம், சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தொகையை அவர் இன்னும் செலுத்தவில்லை. எனவே, அவர் விடுதலையாவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், தனது, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சசிகலா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நலமாக உள்ளேன்
சிறையில் நாங்கள் நலமாக, நல்ல உடல்நிலையுடன் இருக்கிறோம். ஆனால் கொரோனா காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது. கொரோனா நோய் தொற்றுப் பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும், பிற மாநில மக்களும் கோவிட் நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
நீதிமன்றத்தில் செலுத்துங்கள்
கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து, நேர் காணல்களை கர்நாடக சிறைத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர் காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. சிறைத்துறை எனது நன்னடத்தை விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். அபராதத் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும்.
டிடிவி தினகரனிடம் ஆலோசனை
கர்நாடக நீதிமன்றத்தில் அபராதத்தொகையை கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017 தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக தீர்ப்பு நகலில் திருத்தங்கள் குறித்த மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வக்கீல்களிடம் உறுதி செய்ய வேண்டும். அதுபற்றி டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தியதும், நன்னடத்தை விதிமுறைகள்படி, விடுதலையாக சசிகலா முயற்சிக்க கூடும் என்று தெரிகிறது. அல்லது, நன்னடத்தை விதிமுறைப்படி சசிகலா விடுதலையாகுவது குறித்து அவருக்கு இப்போதே பாசிட்டிவ் தகவல் ஏதேனும் கிடைத்திருக்க கூடும் என்றும் பேசப்படுகிறது. எனவே அபராத தொகையை செலுத்தியதும், அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படக்கூடும்.