ஒந்து.. எரடு.. மூரு.. கன்னடத்தில் டிகிரி வாங்க ஆயத்தமாகும் சசிகலா.. விறு விறு ஏற்பாடுகள்!
பெங்களூரு : பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா கன்னட மொழியில் பட்டம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார். தொலைதூரக் கல்வி மூலம் படித்து பட்டம் பெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி சசிகலா உள்ளிட்ட 3 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். தொடக்கத்தில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த சசிகலா பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சிறை வாழ்க்கைக்கு ஏற்ப மாறினார்.
கைதிகள் சிறையில் தோட்டப்பணி, கலை வேலைப்பாடுகள் என எதையாவது செய்ய வேண்டும், சசிகலா தோட்டக்கலை பணியில் ஈடுபாட்டுடன் செடிகளை வளர்த்து வந்தார். இதோடு கலைநயமிக்க பொருட்களையும் செய்யத் தொடங்கினார். சிறையில் உள்ள கைதிகளுக்கு கன்னடம் பேசவும் எழுதவும் கற்றுத் தர சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
[சசிகலாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது! ]
கன்னடம் கற்கும் சசிகலா
முதலில் கன்னட மொழி கற்பதில் விருப்பம் காட்டாத சசிகலா தற்போது கன்னடம் பயில்வதில் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கன்னட மொழியில் பட்டம் பெற விரும்புவதாக சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கன்னடத்தில் பட்டம்
சசிகலா கன்னட மொழியை பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் கன்னட மொழியில் பட்டம் பெற சசிகலா விரும்புவதாக கூறப்படுகிறது. சிறைக்கு வந்த பல்கலைக்கழக அதிகாரிகளிடம் சசிகலா தன்னுடைய விருப்பத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
சசிகலா படிக்க ஏற்பாடு
இந்நிலையில் தொலைதூரக் கல்வி இயக்குனர் பி. சி.மைலாரப்பா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். சசிகலா கன்னடம் கற்க விரும்புவதாக சிறைத்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். விரைவில் சசிகலாவை சிறையில் சந்தித்து தொலைதூரக் கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகள் இருக்கிறது என்பதை விளக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
தண்டனை காலத்தில் பட்டம்
அவருக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் அதனையடுத்து சிறை வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மைலாரப்பா கூறியுள்ளார். சசிகலா இன்னும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் கன்னடத்தில் பட்டம் பெற்றுவிட விரும்பி இந்த முயற்சியை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.