ஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலை.. பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி பரபரப்பு தகவல்
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலை ஆவார் என்று பாஜக பிரமுகர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை விதித்தார் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா.
இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினர். அப்போது நான்கு பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தார் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி. இதன்பிறகு வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. தீர்ப்பு வெளியாகும் முன்பாக ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மறைந்தார்.
அமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே பிளான்கள்!
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதன் பிறகு வெளியான தீர்ப்பில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு
2021ம் ஆண்டு துவக்கத்தில் இவர்களது சிறை தண்டனை காலம் நிறைவடையும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை பெறுவதற்கு சசிகலா தரப்பு முயலக் கூடும் என்று பல மாதங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
தகவல் அறியும் உரிமை சட்டம்
இந்த நிலையில்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், சசிகலா விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம், தேதியை உறுதியாக கூற முடியாது என பதிலளித்திருந்தது. இந்த நிலையில்தான், இதற்கு உச்சம் வைப்பது போல, இன்று சமூக வலைதளங்களில் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலையாக போவதாக ஒரு செய்தி தீயாக பரவியது.
ஆசீர்வாதம் ஆச்சாரி
இந்த நிலையில், பாஜக பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில், "சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அடுத்தகட்ட தகவலுக்கு காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார். இவரது ட்வீட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அரசு தரப்பிலிருந்து ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு ஏதேனும் தகவல் கிடைத்து இருக்கக்கூடும் என்ற பேச்சு இருக்கிறது.
நன்னடத்தை விடுதலை
அதே நேரம், நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் இதுவரை செலுத்தவில்லை என சிறை நிர்வாகம் வட்டாரங்கள் கூறியுள்ளன. இதை செலுத்தினால்தான் அவர்களை விடுதலை செய்வதற்கான வாய்ப்பு இருக்கும். மேலும் சிறையில் இருந்தபோது வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக சிறைத் துறை அதிகாரியாக இருந்த ரூபா, சசிகலா மீது குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகி இருந்தன. இந்தநிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை.
Recommended Video
தமிழக அரசியல்
ஒருவேளை சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆனால், தமிழக அரசியலில், அதிலும், குறிப்பாக அதிமுகவில் அது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த விஷயத்தில் பெங்களூர் சிறை நிர்வாகம் என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.