ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா, சுதாகரன் - விரைவில் விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தி விட்டதால் அவர் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் வழங்கியதை அடுத்து அவர் ஜனவரி மாதம் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை நேற்று சசிகலா வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்கினார். இதனையடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவையாறு தொகுதியில் சசிகலா உறவினர்... 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட களப்பணி..!
முதல்வர் கனவு டூ சிறை கதவு
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதல்வர் கனவில் வலம் வந்தார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அவரது கனவு கலைந்து போனது. சசிகலா உடன், இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறைக்கு சென்றனர்.
சிறை தண்டனை நிறைவு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.
விடுதலை எப்போது
பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆர்.லதா, சிறை ஆவணங்கள்படி உச்சநீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
விடுதலை தேதி மாறலாம்
அபராதத் தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறி இருந்தார் சிறை கண்காணிப்பாளர் லதா.
வக்கீல் செலுத்திய அபராதம்
வழக்கமான நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்து இருந்தார். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் முத்துக்குமார் வழங்கினார். ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தி உள்ளதால் இருவரும் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.