வீல் சேரில் இருந்தபடியே.. தொண்டர்கள், உறவினர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த சசிகலா
பெங்களூர்: பெங்களூர் சிவாஜிநகரில் உள்ள பௌரிங் மருத்துவமனையிலிருந்து சக்கர நாற்காலியில் வெளியே வந்த சசிகலா, தனது உறவினர்களையும் தொண்டர்களையும் பார்த்து கையசைத்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பான அக்ரஹார சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வருகிறார் சசிகலா. இவர் வரும் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகிறார்.
இந்த நிலையில் சசிகலாவுக்கு நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அண்ட் லேடி கர்சன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கொரோனா இல்லை
அவருக்கு அங்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாக பௌரிங் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் சசிகலாவுக்கு இருமலும் காய்ச்சலும் இருந்ததால் பிசிஆர் டெஸ்ட்டும் ரேபிட் பரிசோதனையும் நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
மீண்டும் சிறை
கடந்த ஒரு வாரமாக சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதம் இருந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிடி ஸ்கேன் எடுக்க முடிவு
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு இன்று காலை உணவை எடுத்துக் கொண்டார். அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஸ்கேன் எடுக்க
இதையடுத்து அவர் சிவாஜிநகர் மருத்துவமனையிலிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் வீல் சேரில் வந்த சசிகலா தொண்டர்களையும் உறவினர்களையும் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு கைகளை அசைத்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவர் அங்கேயே 2 முதல் 3 நாட்கள் தங்கி சிகிச்சை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.