சிறையிலிருந்து ரிலீசானார் சசிகலா.. பெங்களூரில் சிகிச்சை தொடர்கிறது.. தமிழகம் வருவது எப்போது?
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையானார். இதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது.
Recommended Video
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 2017 பிப்ரவரி
சசிகலாவின் உறவினர்களான, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அதே நாளில் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவுக்கு, கடந்த வாரம், சிறையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அவருடன், ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கொரோனா அறிகுறி
இருவருக்கும், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக சசிகலா உடல்நிலை தேறியது. சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுதலை
அதேநேரம், கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் 4 ஆண்டுகள் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்தது. எனவே காலை 9 மணியளவில் சிறை அதிகாரிகள் விக்டோரியா மருத்துவமனை சென்று சசிகலாவிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். இதையடுத்து அவர் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்படுவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
மருத்துவமனை சென்ற அதிகாரிகள்
சிறை அதிகாரிகள், முழு கவச உடை அணிந்து, சசிகலா சிகிச்சை பெறும் கொரோனா வார்டுக்கு இன்று காலை சென்று, விடுதலையாகும் கோப்பில் கையெழுத்து பெற்றனர். பின்னர் விடுதலை செய்ததற்கான ஆவணத்தை சசிகலாவிடமே அதிகாரிகள் வழங்கினர். சசிகலாவின் உடைமைகள் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விடுதலைக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், மருத்துவமனைக்குள் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மற்றும் குடும்ப உறவினர்களான இளவரசி மகன் விவேக், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் அங்கு கூட இருந்து மேற்பார்வையிட்டனர்.
இதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு கொடுத்த சிறைத்துறை போலீசார் திரும்பிவிடுவார்கள். அதேநேரம், விஐபி என்ற அந்தஸ்தில் இருப்பதால், பெங்களூர் நகர போலீசார், அவருக்கு பாதுகாப்பை தொடர உள்ளதாக கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார்.
சசிகலா தமிழகம் எப்போது?
அதேநேரம், சசிகலா முழுமையாக குணமடைந்த பிறகே, அவர் தமிழகம் புறப்படுவார் எனக் கூறப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனை அல்லது பெங்களூரில் வேறு தனியார் மருத்துவமனையில், சசிகலா தனது சிகிச்சையை தொடர்வார் என்று கூறப்படுகிறது. இளவரசி, பிப்ரவரி 5ம் தேதி விடுதலையாவார் என்றுக் கூறப்படுகிறது. சுதாகரன் தரப்பில், இதுவரை அபராத தொகை செலுத்தவில்லை என்பதால் அவர் விடுதலை எப்போது என தெரியவில்லை.