4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு- பெங்களூரு சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை!
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார். மருத்துவமனையில் இருந்து நேரடியாக விடுவிக்கப்படுகிறார். இந்த தகவலை பெங்களூரு சிறை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. இவருடன் சொத்துக்குவிப்பு வழக்கில் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டனை காலம் இன்று காலை 10.30மணிக்கு முடிகிறது. இதையடுத்து சசிகலா விடுதலை செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் சதி இருக்குமோ...சந்தேகம் கிளம்பும் முத்தரசன்
நாளை விடுதலை
சிறை விதிகளின் படி சசிகலாவிடம் விடுதலை தொடர்பாக விவரிக்க காலை 9.30மணிக்கு பெங்களூரு சிறை அதிகாரிகள், விக்டோரியா மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை சந்தித்து விவரித்து கையெழுத்து பெறுகிறார்கள். அத்துடன் சிறையில் உள்ள அவரது உடைமைகளை ஒப்படைக்கிறார்கள்.
உறவினர்கள் சந்திக்கலாம்
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவுக்கு வருவதால் விடுதலை செய்யப்படும் சசிகலா, தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. தற்போதைய நிலையில் சிறை தண்டனையில் இருப்பதால், மருத்துவமனையில் இருந்தாலும் அவரை உறவினர்கள் சந்திக்க இயலாது. ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை உறவினர்கள் சந்திக்க எந்த தடையும் இல்லை.
சிகிச்சை பெறலாம்
இதேபோல் சசிகலா விரும்பினால் வேறு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் முடியும். அதேபோல் பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் ஆகிறது. எனவே சசிகலா நினைத்தால் உடனே சென்னைக்கு திரும்பலாம். எனினும் இதுபற்றி அவர் என்ன முடிவு செய்திருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை.
பிரம்மாண்ட வரவேற்பு
இதனிடையே சசிகலாவை வரவேற்க அமமுகவினர் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில், சசிகலா சென்னை வரும் நாளில் உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வரவேற்பு பெங்களூரு மட்டுமின்றி சென்னையில் பெரிய அளவில் இருக்கும் என்று அமமுகவினர் தெரிவித்தனர்- எப்போது சென்னை திரும்புவது என்பதை சசிகலா முடிவு செய்வார் என தெரிகிறது.