எப்போது வேண்டுமானாலும் சசிகலா ரிலீஸ் ஆவார்.. வக்கீல் கொடுத்த மனு.. பரபரப்பில் தமிழக அரசியல்
பெங்களூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா எப்போது வேண்டுமானாலும் பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்தார்.
இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெகிழ்ச்சி
உச்சநீதிமன்றம் அதிரடி
குமாரசாமி தனது தீர்ப்பில் 4 பேரின் வருவாய்க்கு அதிகமான சொத்து கணக்கு கூட்டலில் தவறு இழைத்து விட்டதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி, ஜெயலலிதா மறைந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், மற்ற 3 பேருக்கும் குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது.
பெங்களூர் சிறையில் சசிகலா
இதையடுத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல், பெங்களூர் நகரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக சசிகலா விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அபராதம்
இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்புப்படி, சமீபத்தில் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை சசிகலா வழக்கறிஞர்கள் செலுத்தி விட்டனர். கைதிகள் நன்னடத்தை விதிப்படி ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் தண்டனை குறைப்பு செய்ய முடியும். சசிகலா சிறையில் இருந்த 43 மூன்று மாதங்களுக்கு, தலா மூன்று நாட்கள் வீதம், 129 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை கைவசம் இருக்கிறது.
எப்போது வேண்டுமானாலும் விடுதலை
எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சசிகலா விடுதலை ஆவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். விடுமுறை நாட்களை கழித்து சசிகலாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்ததாகவும், ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்
அதேநேரம், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில்தான், சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக, பெங்களூர் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா விடுதலையானபிறகு அதிமுகவில் பல்வேறு அதிர்வுகள் இருக்கும் என்பதால் தமிழக அரசியல் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.