ஜெயில் - அத்திப்பள்ளி டூ சென்னை.. போலீஸ் பந்தோபஸ்துடன் சின்ன மம்மி ரிட்டன்ஸ்.. முதல் விசிட் ஜெ சமாதி
பெங்களூர்: இந்த மாதம் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியாகும் சசிகலாவை வரவேற்க அமமுகவினர் தயாராகி வருகிறார்கள்.
ஜெயலலிதா மறைந்தவுடன் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா, முதல்வராக ஆசைப்பட்டார். இதையடுத்து பதவிக்காக அவர் போட்ட ஆட்டங்கள் அனைவரும் அறிந்ததே!
ஆனால் அவர் பதவியேற்க இருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலாவுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
மாட்டுச்சாணம் - சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துங்கள்.. கர்நாடக அமைச்சரின் உபதேசம்..!
மோசடிகள்
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சிறையிலும் சசிகலாவுக்கு விஐபி அந்தஸ்து, ஷாப்பிங் போவது என பல மோசடிகள் அம்பலமாகின. இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்தபடியே கன்னட மொழியை கற்றுக் கொண்டார். பல கைத்தொழில்களையும் கற்று தேர்ந்துள்ளார்.
ஜனவரி 27
இந்த நிலையில் அவரது தண்டனை காலம் இந்த ஆண்டு முடிவடையும் என கணக்கிடப்பட்டது. ஏற்கெனவே அவர் சிறையில் இருந்த நாட்கள், பரோலில் வெளியே வந்த நாட்கள் என கணக்கு கூட்டி கழித்து பார்த்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என தகவல் அறியும் சட்டத்தின்படி தகவல் வெளியானது.
விடுதலை
இதையடுத்து சசிகலா எந்த நேரத்தில் விடுதலை செய்யப்படுவார் என சிறைத் துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்களாம். மேலும் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் போது அவரது பாதுகாப்பு கருதி தமிழக எல்லை வரை ஆயிரக்கணக்கில் கர்நாடகா போலீஸாரும் மேலும் தமிழக எல்லையிலிருந்து அழைத்து செல்ல தமிழக போலீஸாரும் வரவுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்றங்கள்
அது போல் அமமுகவினரும் லட்சக்கணக்கானோர் திரண்டு சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார். சசிகலா சென்னை வந்ததும் நேராக ஜெயலலிதா சமாதிக்கு சென்றுவிட்டு அஞ்சலி செலுத்திவிட்டுதான் செல்வார் என தெரிகிறது. அது போல் சிறை செல்லும் போதும் அவர் ஜெயலலிதா சமாதிக்கு வந்திருந்தார். இவர் ரிலீஸானதும் தமிழகத்தில் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.