சிறையிலிருந்து அல்ல.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை செல்கிறார் சசிகலா?
பெங்களூர்: பெங்களூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்ட்ரெயிட்டாக சசிகலா சென்னைக்கு பயணம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததன் காரணமாக 4 வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தவர் சசிகலா.
வரும் 27 ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டி இருந்தது. இந்த நிலையில்தான் நேற்று திடீரென அவருக்கு மூச்சு திணறல் பிரச்சினை ஏற்பட்டது.
பெங்களூர் விரைந்த டிடிவி தினகரன்.. சித்தியிடம் நலம் விசாரிப்பு.. சசிகலா நல்லா இருக்கிறாராம்!
சிடி ஸ்கேன் வேலை செய்யவில்லை
இதையடுத்து சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவுரிங் அரசு மருத்துமனையில் சசிகலா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பிறகு இன்று அவர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிடி ஸ்கேன் இயந்திரம் வேலை செய்யவில்லை என்பதால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், அங்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காரில் சென்னை செல்கிறார்
சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதியும், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டிய தேதியும் ஏறத்தாழ ஒரே நாளில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து, கார் மூலம், ஓசூர், கிருஷ்ணகிரி, ஆம்பூர் வேலூர் வழியாக சென்னை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறைக்கு பதில், மருத்துவமனை
சிறையில் இருந்து வெளியே வரும்போது அவருக்கு வரவேற்பு அளிக்க தொண்டர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது மருத்துவமனையிலிருந்து செல்லும்போது அவருக்கு வரவேற்பு கிடைக்க உள்ளது.
மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்
"சிறையில் கடும் அல்லலுக்கு ஆளானதால் அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடல் நலம் தேறி தமிழகம் வருகிறார். எனவே தொண்டர்களிடையே எழுச்சியான வரவேற்பு இருக்கும்" என்று சொல்கிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர் ஒருவர்.
ஜெயலலிதா நினைவிடம்
27ஆம் தேதி சசிகலா ரிலீஸ் ஆகும்போது ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நடக்க உள்ளது. அதே நாளில் சசிகலா பெங்களூர் மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு காரில் செல்வார் என்று கூறப்படுகிறது.