ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை.. சிறைத் துறை சூசகம்!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என சிறைத் துறை நிர்வாகம் சூசகமாக தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் சசிகலாவுக்கு அபராதத் தொகையாக ரூ 10 கோடி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இவர்களது தண்டனை காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
105 நாட்கள்
இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சிறை கைதிகளுக்கு ஒரு மாதத்திற்கு தலா 3 நாட்கள் தண்டனை குறைப்பு வழங்கப்படும். இது கைதிகளின் உரிமை கிடையாது. சிறைத் துறை அதிகாரிகள் எடுக்கும் முடிவாகும். அப்படிப்பார்த்தால் சசிகலாவுக்கு 105 நாட்களுக்கு முன்பே விடுதலை கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
விடுதலை செய்ய மனு
இதை நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என சிறைத் துறை நிர்வாகத்திடம் சசிகலா மனு தாக்கல் செய்தார். இது சிறைத் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை சிறைத் துறை கேட்டது.
ஆர்டிஐ சட்டம்
இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா குறித்து கேட்ட கேள்விக்கு சிறைத் துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில் சசிகலா ரூ 10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டதாக தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சூசகம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் தண்டனை கைதி 9 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் அவர் 60 வயதை அடைந்திருந்தால் அவர்களுக்கு தண்டனையில் சலுகை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுதலையில் சலுகை கிடையாது என சிறைத் துறை சூசகமாக தெரிவித்தது.
17 நாட்கள் சேர்ப்பு
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். அது அவரது தண்டனை காலத்தில் கழிக்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் அவர் இரு முறை 17 நாட்கள் பரோலில் சென்னை வீட்டிற்கு சென்றிருந்தார். எனவே அந்த நாட்கள் தண்டனை காலத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால் ஜனவரி 27-ஆம் தேதிதான் சசிகலா விடுதலை ஆவார் என்பது உறுதியானது. ஆர்டிஐ சட்டத்தின் கீழ் இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத 3ஆவது நபர் தன்னை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது என சசிகலா ஏற்கெனவே சிறைத் துறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.