கன்னடத்தில் கூட பாஸாகிட்டேன்... நன்னடத்தை நாட்களை கணக்கில் சேருங்க.. எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம்?
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் தம்மை நன்னடத்தை நாட்களை கணக்கில் சேர்த்து முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
டெல்லியில் ரகசிய மேலிட சந்திப்புகளில் என்னதான் சொன்னார்கள்? சசிகலாவடன் மந்திராலோசனை நடத்தும் தினகரன்
சசிகலா முன்கூட்டியே விடுதலை?
சசிகலா உள்ளிட்டோரின் தண்டனை காலம் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக உள்ளனர். இதனை பெங்களூரு சிறை நிர்வாகம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் நன்னடத்தை நாட்களை கணக்கில் கொண்டு சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான முயற்சிகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினகரன் டெல்லி பயணம்
தினகரனின் டெல்லி பயணமும் கூட சசிகலாவின் விடுதலை தொடர்பானதாகத்தான் என கூறப்படுகிறது. என்னதான் நன்னடத்தை சலுகைகள் ஒரு கைதிக்கு இருந்தாலும் அரசியல் தலையீடுகளின் அடிப்படையில்தான் இதில் முடிவுகள் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் சசிகலா தரப்பு இடைவிடாமல் அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம்?
இதன் ஒருபகுதியாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலாவும் ஒரு கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கடிதத்தில் தாம் சிறை தண்டனை காலத்தில் கன்னட மொழியை கற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். பரோல் நாட்கள் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு நன்னடத்தை நாட்களை சலுகையாக தமக்கு வழங்க வேண்டும் எனவும் சசிகலா கேட்டிருக்கிறாராம்.
சசி முன்கூட்டியே விடுதலைக்கு எதிர்ப்பு
அதேநேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சிறையில் இருந்து விடுதலையாகிவிடக் கூடாது என்பதில் ஒருதரப்பு படுபிஸியாக இருக்கிறதாம். ஆகக் குறைந்தபட்சம் ஜனவரி வரையிலாவது சசிகலா சிறையில் இருந்தால் தங்களது அரசியல் பயணங்களுக்கு எந்த இடையூறும் இல்லை என கணக்குப் போட்டு அதற்கேற்ப குறுக்குசால் காய்களையும் அந்த குரூப் நகர்த்தி வருகிறதாம். சசிகலாவின் விடுதலையை தீர்மானிக்கப் போவது அரசியல்வாதிகள்தானாம்!