9 மாதங்கள் பிறகு.. கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு.. பெற்றோரிடம் மாணவர்கள் ஒப்புதல் வாங்கி வர வேண்டும்
பெங்களூர்: கொரோனா பரவல் காரணமாக, கர்நாடகாவில், கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 1ம் தேதியான இன்று முதல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் துவங்கிவிட்டன. 6 முதல்ல 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வித்யாகமா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்வி கற்பதற்கான துவக்க நாள் நிகழ்ச்சியாகும் இது.
பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். பள்ளிகளில், சானிடைசர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்கனவே வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களும், தங்கள் பெற்றோரிடமிருந்து, "ஆட்சேபனையில்லை" என்பதற்கான சான்றிதழை கொண்டு வர அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த கடிதம் இருந்தவர்கள் மட்டுமே வகுப்பறைகளுக்குள் விடப்பட்டனர். வெகு நாட்கள் பிறகு தோழன், தோழிகளை பார்த்த மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
நற்செய்தி... கடந்த ஒரு வாரமாக... கொரோனா தினசரி உயிரிழப்பு... 300--க்கும் கீழ் பதிவு!
கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சுரேஷ் குமார், கூறுகையில், பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை. விரும்பியோர் வரலாம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதிப்பார்கள் என்று தெரிவித்தார். முன்னதாக அவர் சில பள்ளிகளுக்கு நேரில் விசிட் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
கிராமப்புறங்களில் போதிய ஆன்லைன் கல்வி வசதி இல்லை என்பதால் பள்ளிக் கல்வி அவர்களின் பொதுத் தேர்வுக்கான பயிற்சிக்கு உதவும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். முதல் நாளில் 50 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் வருகை இருந்ததாகவும், திங்கள்கிழமை முதல் இது அதிகரிக்கும் எனவும் கர்நாடக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.