எடியூரப்பா ஆபீசை முற்றுகையிட.. ஆரவாரமாக கிளம்பிய சித்தராமையா.. பாதி வழியில் கைது செய்த போலீஸ்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தை முற்றுகையிட கிளம்பிய முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், பீதர் நகரிலுள்ள ஒரு பள்ளியில், சமீபத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மாணவ, மாணவிகளை வைத்து நாடகம் போட்டுள்ளனர். அதில் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த சட்டத்திற்கு எதிராகவும், வாசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக சட்டத்தின்கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், பெங்களூரில், எடியூரப்பா வீட்டை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், பெங்களூர் ஊரக தொகுதி எம்.பி. டி.கே.சுரேஷ் (டி.கே.சிவகுமார் தம்பி), ஆகிய தலைவர்கள், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி குதித்து செல்ல முயன்றனர். இருப்பினும், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இருப்பினும் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.