அமித் ஷா உருவ பொம்மை எரித்த பாஜகவினர்.. எடியூரப்பாவுக்கு நெருக்கடி.. அனல் பறக்கும் கர்நாடக அரசியல்
Recommended Video
பெங்களூர்: கடந்த மாதம் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். ஆனால் பெரும் இழுபறியால், 20 நாட்களுக்கு பிறகு 17 பேர் கொண்ட அமைச்சரவையை எடியூரப்பா அமைத்தார்.
இந்த நிலையில், அதிரடி முடிவாக, கோவிந்த கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவதி ஆகியோர் துணை முதல்வராக நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
முதல் முறையாக கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்ட 'வரலாற்று சாதனையை' நிகழ்த்திவிட்டார் எடியூரப்பா.
அரசு கார்
இதனால் பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஈஸ்வரப்பா, அசோக் போன்ற மூத்த தலைவர்கள் தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.டி.ரவிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில், உள்ள அவர், அரசு வழங்கிய காரை திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.
அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு
மற்றொரு பக்கம் ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான ஸ்ரீராமுலு ஆதரவாளர்கள், ஸ்ரீராமுலுவை துணை முதல்வராக்கவில்லை என்று கூறி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரம் மறுப்பு
பெங்களூரில் இன்று, செய்தியாளர்களை சந்தித்த சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமையா, கர்நாடக அமைச்சரவையை எடியூரப்பா தீர்மானிக்கவில்லை. அமித்ஷா தீர்மானித்துள்ளார். கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அனைத்து குளறுபடிகளுக்கும், மத்தியின், சொல்லைக் கேட்டு ஆடக்கூடிய எடியூரப்பாதான் காரணம். முதல்வரின், அதிகாரம் முடக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்தார்.
ஜாதி விவகாரம்
எடியூரப்பாவின் முந்தைய, ஆட்சிக்காலத்தில் அசோக் துணை முதல்வராக பதவி வகித்தார். காங்கிரஸ் சீனியர் தலைவரான முன்னாள் முதல்வர் சித்தராமையாவை போலவே, பாஜகவில் செல்வாக்கு பெற்ற குருபர் ஜாதியை சேர்ந்த ஒரு தலைவர்தான் ஈஸ்வரப்பா. ஆனால் அவருக்கு எடியூரப்பா அரசில் துணை முதல்வர் பதவி தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குருபர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு பாஜக அரசில் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.