அரசு வேலை கேட்டு வந்த... பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கர்நாடக பாஜக அமைச்சர் மீது பரபரப்பு புகார்
பெங்களூரு: கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் உள்ளவர் ரமேஷ் ஜர்கிஹோலி. கர்நாடக மாநிலத்தை மஜத-காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தபோது, அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏகளை ராஜினாமா செய்ய வைத்து, ஆபரேஷன் கமலாவை வெற்றிகரமாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
இதையடுத்து ஆட்சியமைத்த எடியூரப்பா தலைமையிலான பாஜக அமைச்சரவையில், ரமேஷ் ஜர்கிஹோலிக்கு நீர்வளத்துறை வழங்கப்பட்டது. இந்நிலையில், பெண் ஒருவரிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அரசு வேலை கோரி அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியிடம் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை அவர் துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாகவும் அத்துமீறியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவங்களைப் பாதிக்கப்பட்ட பெண் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
திமுக ராமருக்கு எதிரானது இல்லை.. உதயநிதி போட்டியிடவில்லை என்பது தவறான தகவல்.. ஆர்எஸ் பாரதி பேச்சு
அமைச்சரிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அப்பெண்ணின் குடும்பத்தினர், இது குறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவரின் உதவியை நாடியுள்ளனர். இன்று கர்நாடக போலீஸ் கமிஷனர் கமல் பந்த்தை நேரில் சந்தித்த தினேஷ் கல்லஹள்ளி, இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்களை கமிஷனரிடம் அளித்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி கூறினார். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க ரமேஷ் ஜர்கிஹோலி மறுத்துவிட்டார்.
பாலியல் அத்துமீறல் புகாரையடுத்து அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அமைச்சர் மீதான பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது