பெங்களூரிலிருந்து பெல்காமுக்கு மாநில அரசு அலுவலகங்களை மாற்ற முதல்வர் எடியூரப்பா திடீர் உத்தரவு
பெங்களூரு: பெங்களூரிலிருந்து பெல்காமுக்கு மாநில அளவிலான அரசு அலுவலகங்களை அடையாளம் கண்டு ஒரு மாதத்தில் மாற்ற கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் மாகாராஷ்டிரா மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் பெல்காவி. இதன் தலைநகரம் தான் பெல்காம்.
இந்த பெல்காம் மாவட்டத்தில் மராத்தி பேசுபவர்கள் மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமாக உள்ளனர். இரு மாநிலத்திற்கு தீராத எல்லை பிரச்சனையாக உள்ள மாவட்டம் ஆகும்.
புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..பாதிப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு
பெல்காம் மாவட்டம்
இந்த பெல்காம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று மகாராஷ்டிரா நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில், பாம்பே பிரசிடென்சி பகுதியாக இருந்தபோது, தற்போது கர்நாடகாவில் உள்ள பிஜாபூர், பெல்காம், தர்வார் மற்றும் உத்தர கன்னடா பகுதிகள் ஒரே மாகாணத்தின் கீழ் இருந்தை குறிப்பிட்டு தான் இன்றுவரை மகாராஷ்டிரா பெல்காம் மாவட்டத்திற்காக தொடர்ந்து கர்நாடகாவுடன் மோதி வருகிறது.
கர்நாடகாவில் இணைந்தது
1948ம் ஆண்டில், பெல்காம் நகராட்சியில் மராத்தி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தனர்., அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பெல்காம் மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் 1956ம் ஆண்டில் மாநில மறுசீரைமப்பு சட்டத்தின் கீழ், மொழிவாரி மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பிரிக்கப்பட்டபோது, பெல்காம் மைசூரு மாநிலத்துடன் ( 1973ல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் பெற்றது) இணைக்கப்பட்டது.
தீராத பிரச்சனை
இந்நிலையில் பெல்காம் பகுதியை மீண்டும் மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் வலியுறுத்தி 1957ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. அப்போது முதல் பல்வேறு போராட்டங்கள் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த பிரச்சனை தீவிரமாக மாறியது.
அரசு அலுவலகங்கள் மாற்றம்
இந்நிலையில் கர்நாடகா அரசு பெல்காமை இரண்டாவது தலைநகராக அறிவிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக ஒரு மாதத்திற்குள் பெங்களூரிலிருந்து பெல்காமுக்கு மாநில அரசு அலுவலகங்களை அடையாளம் கண்டு மாற்ற முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார் என்று கர்நாடகா மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தலைநகர் மாற்ற அறிவிப்பால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.