வேக்சின் தயாரிக்க முடியவில்லை எனில்.. தூக்கிலா தொங்க முடியும்?.. சதானந்த கவுடா சர்ச்சை.. பரபர பேச்சு
பெங்களூர்: வேக்சின் தயாரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என்ன தூக்கிலா தொங்க வேண்டும்? என்று மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க வேக்சின் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. கோவாக்சின், கோவிட்ஷீல்ட் என்ற இரண்டு வேக்சின்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருவதால் மக்களிடையே இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேக்சின் தட்டுப்பாடு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பாஜகவை சேர்ந்த மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், வேக்சின் உற்பத்தி முடிந்த அளவு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
எங்களால் முடிந்த அனைத்து பணிகளையும் நேர்மையாக, வேகமாக செய்கிறோம். சில விஷயங்களை கட்டுபடுத்த முடியாது. எல்லா விஷயங்களையும் அரசு மாற்றிவிட முடியாது. கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களுக்கு முடிந்த அளவு வேக்சின் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். நாங்கள் முன்பே திட்டமிட்டதால் இறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் திட்டமிடவில்லை என்றால் பலி எண்ணிக்கை இதைவிட பல 100 மடங்கு உயர்ந்து இருக்கும். கொரோனா வேகமாக நினைத்ததை விட அதிகமாக உள்ளது. நீதிபதிகளின் உத்தரவுகளை செயல்படுத்தி வருகிறோம். நீதிபதிகளுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது.
எங்களிடம் இருக்கும் தொழில்நுட்பங்களை வைத்து முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவில் எல்லோரும் வேக்சின் பெற வேண்டும் என்று கோர்ட் கூறுகிறது.
அது நல்ல எண்ணம்தான். ஆனால் நாளையே இத்தனை பேருக்கு வேக்சிங் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் சொல்லி எங்களால் அதை கொடுக்க முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது.. வேக்சிங் தயாரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என்ன தூக்கிலா தொங்க வேண்டும்? நாங்கள் செய்வது என்று சொல்லுங்கள், என்று சதானந்த கவுடா மிகவும் கோவமாக கேள்வி எழுப்பிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.