பார்க், மால் வரும் காதலர்களை.. ஐயோ! 'காதலர் தின' ஜோடிகளுக்கு எச்சரிக்கை
பெங்களூரு: காதலர் தினத்தில் அத்துமீறும் காதலர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீராம் சேனை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காதலை தினம் நாளை பிப்.14 உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் எப்போதும் சிறப்பாக கொண்டாடப்படும் தினம் இது. காதலை 'இதயம்' முரளி போன்று பல நாட்களாக மனதிற்குள்ளேயே வைத்திருப்பவர்கள் அன்றைய தினம் தங்கள் காதலை டிக்ளேர் செய்வார்கள்.
கமிட் ஆனவர்கள், கமிட் ஆக காத்திருப்பவர்கள், இனிமேல் தான் கமிட் ஆக வேண்டும் என்று இருப்பவர்கள் என ஒரு பட்டாளமே நாளைய காதலர் தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஸ்ரீராம் சேனை எனும் அமைப்பு காதலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாளைய தினம் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் தங்களது ஆட்கள் மூலம், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் இளசுகள் கண்டறியப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
50 'டூ' 60 இடங்கள்
இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைவர் பிரமோத் கூறுகையில், "மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று நாங்கள் மாதா - பிதா பூஜை நடத்துவோம். இந்த முறை 50 - 60 இடங்களில் எங்கள் ஆட்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
தீவிரமாக கண்காணிப்போம்
எங்களது சேனை அமைப்பைச் சேர்ந்தோர், பப்கள், பார், மால், ஐஸ்கிரீம் பார்லர், பூங்காக்கள் என்று அனைத்து இடங்களிலும் இருந்து, அநாகரீகமாக நடந்து கொள்ளும் காதலர்களை கண்டறிவார்கள்.
போலீஸுடன் இணைந்து
இருந்தாலும், எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், ஆனால் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் மற்றும் லவ் ஜிஹாத்
இதுகுறித்து ஸ்ரீராம் சேனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கத்திய கலாச்சாரம் இளைஞர்களை அதன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறது. இது நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவிர இது போதை மருந்து, பாலியல் மற்றும் லவ் ஜிஹாத் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. காதலர் தினம் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸை அணுகலாம்
இதற்கிடையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பண்ட் கூறுகையில், "நாங்கள் யாரையும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்க மாட்டோம். யாருக்காவது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அவர்கள் காவல்துறையை அணுகலாம்" என்று கூறியுள்ளார்.