"அதெல்லாம் வேண்டாம்!" வந்தே மாதரம் பாடலுக்கு நோ சொல்லும் சித்தராமையா! பரபர வீடியோவுக்கு பாயும் பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் அரசியலமைப்பு தின கொண்டாடத்தின் போது, காங்கிரஸின் சித்தராமையா கூறிய சில கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 26ஆம் தேதி தேசிய அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டது.
இருப்பினும், நாட்டின் அரசியலமைப்பே மெல்லச் சிதைக்கப்பட்டு வருவதாகக் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கூறியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நான் கார்கே.. தீண்டத்தகாதவன்! மோடியோ பொய்களின் தலைவர் -குஜராத்தில் எமோசன் ஆன காங்கிரஸ் புதிய தலைவர்
அரசியலமைப்பு தினம்
இதற்கிடையே கர்நாடக முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, அரசியலமைப்பு நாள் கொண்டாடத்தின் போது சொன்ன விஷயம் தான் இப்போது பரபரப்பைக் கிளப்பி உள்ளது. அதாவது கர்நாடக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாட வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியது தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சித்தராமையா
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் அரசியல் சாசன தின விழா நிகழ்ச்சிகள் குறித்து கட்சித் தலைவர்கள் விவாதிப்பது தெரிகிறது. காங்கிரஸ் கர்நாடக மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், சலீம் அகமது உள்ளிட்டோர் அந்த வீடியோவில் உள்ளனர். இதில் யார் வரவேற்புரை அளிக்க வேண்டும், யார் சிறப்புரை அளிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் ஆலோசிக்கின்றனர்.
வந்தே மாதரம்
அரசியலமைப்பு தின நிகழ்ச்சியை முதலில் இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரத்துடன் தொடங்கலாம் என்று சலீம் கூறுகிறார். அப்போது இடைமறிக்கும் சித்தராமையா தேசியப் பாடலைப் பாடத் தேவையில்லை என்கிறார். இருப்பினும், சில நொடிகளில் தனது தவறை உணர்ந்து கொண்ட சித்தராமையா, "நீங்கள் வந்தே மாதரம் பாட விரும்பினால் பாடலாம். பிறகு அப்போது வந்துவிட்டு.. சித்தராமையா வந்தே மாதரம் பாட வேண்டாம் என்று கூறினார் எனச் சொல்லக் கூடாது" என்று அவர் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
விமர்சனம்
இதனை இப்போது இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் சித்தராமையா பேச்சை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் பலரும் இந்திய தேசிய பாடலை பாட வேண்டாம் என்று சித்தராமையா எப்படி சொல்லலாம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகா
மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகாவில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கடந்த தேர்தலைப் போலவே குமாரசாமியின் பங்கும் இந்தத் தேர்தலில் முக்கியமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பசவராஜ் பொம்மை அரசு மீதான அதிருப்தி அதிகமாக இருப்பதால் காங்கிரஸ் வெல்வது உறுதி என அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் சித்தராமையாவின் இந்த பேச்சை பாஜகவினர் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
காங்கிரஸ்
முன்னதாக அரசயலிமைப்பு தினத்தன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 'இந்திய அரசியலமைப்பின் நெருக்கடி' என்ற தலைப்பில் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்தியாவை மீட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பும் சரி பாஜகவும் சரி இரண்டும் ஒன்று தான்.. மத்திய அரசும் அதன் அமைப்புகளும் முழுமையாக ஆர்எஸ்எஸ் கட்டளைகளுக்கு தங்களை முழுமையாக ஒப்படைத்துவிட்டது.. இந்திய அரசியலமைப்பு, இப்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது.. அதன் ஆத்மாவே நெருக்கடியில் உள்ளது" என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.