இது கொரோனாவை விட மோசம்.. வென்டிலேட்டரில் ஊழல்.. ஆதாரங்களை வெளியிட்டார் சித்தராமையா!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பாஜக அரசு 2000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் சித்தராமையா அதற்கான ஆதாரங்களாக ஆவணங்களை வெளியிட்டார்.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, ''கர்நாடகா அரசு ஒரு வென்டிலேட்டரை ரூ. 4 லட்சம் என்று வாங்கியுள்ளது. ஆயிரம் வென்டிலேட்டர்களை வாங்கியுள்ளது. அப்படி என்றால் மொத்தம் 40 கோடி ரூபாய்தான் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், எடியூரப்பா அரசு, 120 கோடி ரூபாய் என்று ஆவணங்களில் காட்டியுள்ளது.
மூன்று பல்வேறு தேதிகளில் பிபிஈ கிட்ஸ், தெர்மல் ஸ்கேன்னர், சானிடைசர் படுக்கை, வென்டிலேட்டர் ஆகியவை வாங்கி உள்ளது. வென்டிலேட்டர்களை ரூ. 5.6 லட்சம், ரூ. 12.32 லட்சம், ரூ. 18.2 லட்சம் ஆகிய வெவ்வேறு விலைகளில் வாங்கியுள்ளது. பிபிஈ கிட்ஸ், தெர்மல் ஸ்கேன்னர், சானிடைசர் படுக்கை, வென்டிலேட்டர் வாங்கியதிலும் ஊழல் செய்துள்ளனர்.
மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யவில்லை என்று பாஜக அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் செய்ததற்கான ஆதாரங்களை நான் தற்போது வெளியிட்டு இருக்கிறேன்.
கடந்த 21ஆம் தேதி பொது மக்கள் முன்பு பேசிய முதல்வர் எடியூரப்பா, கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியது தொடர்பான தகவல்களை 24 மணி நேரத்தில் கொடுப்போம் என்று கூறினார். ஆனால், நாங்கள் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக ஆவணங்களை கொடுக்குமாறு கேட்கிறோம். இன்று வரை எங்களுக்கு கொடுக்கவில்லை. ஏன் அரசு வெளிப்படையாக இல்லை. சட்டசபைக்கும், மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது'' என்றார்.
இன்று சித்தராமையா வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமானது என்றும், அவற்றில் அரசு அதிகாரிகள் கையொப்பம் இருக்கிறது என்றும் சித்தராமையா தெரிவித்து இருந்தார். நேற்றில் இருந்து காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை கூறி வரும் நிலையில், உடனடியாக அமைச்சர்களை சந்தித்த எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அமைச்சர்கள் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
கைமாறும் நிறுவனம்?.. டிக்டாக் செயலியில் நினைத்து பார்க்க முடியாத டிவிஸ்ட்.. பின்னணியில் அமெரிக்கா!
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்களை ஆளும் பாஜக அமைச்சர்கள் மறுத்துள்ளனர். கொரோனா நடவடிக்கைகளை ஐந்து அமைச்சர்கள் கையாண்டு வருகின்றனர். இவர்கள் சார்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுதாகர், ''கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2019ல், ஒரு வென்டிலேட்டர் ரூ. 21 லட்சம் என்ற விலையில் 39 வென்டிலேட்டர்கள் வாங்கினார்கள். ஆனால், நாங்கள் உயர்தர வென்லேட்டர்களை ரூ. 18 லட்சத்துக்கு வாங்கியுள்ளோம். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன'' என்றார்.