கர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு நான் காரணமல்ல.. தேவகௌடாகாருதான்.. சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் காரணமல்ல என சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் 14 மாதங்களுக்கு முன்னர் ஜேடிஎஸ்- காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமைச்சர் பதவி, அதிகார போட்டி ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த 16 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து சட்டசபையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எடியூரப்பா தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது.
சித்தராமையா
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததன் பின்னணியில் சித்தராமையா இருந்தார் என தேவகௌடாவும் குமாரசாமியும் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார்.
பிடிக்கவில்லை
அப்போது அவர் கூறுகையில் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு காரணம் நான் தான் காரணம் என குமாரசாமியும் தேவகௌடாவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதிலிருந்து கௌடா குடும்பத்துக்கே என்னை பிடிக்கவில்லை என்பது கண் கூடாக தெரிகிறது.
அஞ்சும் குடும்பத்தினர்
அரசியல் ரீதியில் என்னை அழிக்க பார்க்கின்றனர். காங்கிரஸில் இருந்து என்னை வெளியேற்ற முடியும் என நினைக்கின்றனர். இதுபோன்ற தந்திரங்கள் கௌடாவுக்கு நன்றாகவே தெரியும். குமாரசாமிக்கு எதிராக தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காகவே கௌடா குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
அரசு கவிழ்ந்தது எதனால்
தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள கௌடா எதை வேண்டுமானாலும் செய்வார். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை பாராட்டியுள்ளார். காங்கிரஸ்- ஜேடிஸ் கூட்டணி கவிழ்ந்தது என்னால் அல்ல.
வாழ்வில் வளம் பெற
இதற்கு முழுக்க முழுக்க தேவகௌடாவே காரணம். தனது சுயநலத்தால் பாஜக ஆட்சி அமைக்க வழிவகுத்துள்ளார். நான் ஒக்கலிகா சமூகத்திற்கு எதிரானவன் என தேவகௌடா சித்தரிக்கிறார். ஒக்கலிகா சமூகத்தின் பெயரை பயன்படுத்தி தேவகௌடாவும் குமாரசாமியும் வாழ்வில் வளம் பெற முயற்சிக்கின்றனர் என சித்தராமையா குற்றம்சாட்டினார்.