சித்தராமையா பேத்தியை பார்த்து இப்படியா பேசுவது.. பாஜக தலைவருக்கு எதிராக வெடித்த சர்ச்சை
பெங்களூர்: சவுக்கிதார் என்று கூறுவதற்கு பதிலாக 'பாகல்' என்று பாஜக தலைவர்கள் தங்களை அழைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான, சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் பாஜக தலைவருமான ஈஸ்வரப்பா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சுக்கு, இவ்வாறு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
ஈஸ்வரப்பா தனது உரையின்போது, சித்தராமையா முதல்வராக இருந்தபோது தான் சட்டமன்ற மேலவையில் எழுப்பிய, சிறுமி பலாத்காரம் தொடர்பான கேள்விக்கு, "அதற்கு அரசு என்ன செய்ய முடியும்" என்று மெத்தனமாக பதில் சொன்னவர் சித்தராமையா. ஆனால் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்ததால், 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தவர் நரேந்திர மோடி. இதுதான் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நடுவேயான வித்தியாசம்.
சித்தராமையாவின் பேத்தியை ஒருவேளை யாராவது பலாத்காரம் செய்தாலும் இதுபோல தான் அவர் பதில் அளிப்பாரா. இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் ஈஸ்வரப்பா. எனவேதான், சவுக்கிதார் அதாவது பாதுகாவலர் என்பதற்கு பதிலாக பாகல் அதாவது பைத்தியக்காரர்கள் என்று பாஜக தலைவர்கள் தங்களை அழைத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் சித்தராமையா.
இதனிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ஈஸ்வரப்பா, சித்தராமையாவின் பேத்தி குறித்து கூறிய கருத்தின் மூலம், தான் ஒரு மனிதாபிமானமற்றவர் என்பதை நிரூபித்துள்ளார்.
By asking “What if @siddaramaiah’s grand daughter was raped,” @BJP4Karnataka leader KS Eshwarappa has revealed his inhuman side. Only a person who has lost his mental balance would make such a reference to a school going kid. He should be locked up permanently. @PMOIndia
— KPCC President (@KPCCPresident) May 6, 2019
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால்தான், பள்ளி செல்லும் சிறுமியை உவமையாகக் கொண்டு இப்படி ஒரு கருத்தை தெரிவிக்க முடியும், என்று கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் ஐடியை, தனது ட்வீட்டில் அவர் டேக் செய்துள்ளார்.
ஈஸ்வரப்பா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒரு கேள்வி பதிலில் போது, பெண் நிருபர் ஒருவரை பார்த்து, யாராவது உங்களை பலாத்காரம் செய்தால், எதிர்க்கட்சியான எங்களால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கியவர்தான் ஈஸ்வரப்பா.