சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி
"சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும்," என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கர்நாடாகவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.பாட்டீல், சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,"கர்நாடக முதல்வராக சித்தராமையா மீண்டும் வர வேண்டும். இதில், என்ன தவறு இருக்கிறது. அவர் எங்களது கட்சியின் தலைவர். மக்கள் அவரை மீண்டும் முதல்வராக பார்க்க விரும்புகின்றனர். நாங்களும் அவரை மீண்டும் முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறோம்.
சித்தராமையா முதல்வராக இருந்தபோது 5 ஆண்டுகள் சிறந்த நிர்வாகத்தை வழங்கி இருக்கிறார்," என்று பாட்டீல் கூறினார். இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்து சித்தராமையாவை முதல்வராக வர வேண்டும் என்று குரல் எழுப்பி வருவது பற்றி பாட்டீலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு,"முதல்வராக இருந்தபோது சித்தராமையா ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார். விவசாய கடன் தள்ளுபடி, நீர்பாசனத் திட்டங்கள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அன்ன பாக்யா உள்ளிட்ட சிறந்த திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.
மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவருக்கு மீண்டும் ஒருமுறை முதல்வராகும் தகுதி உள்ளது. அதேநேரத்தில், தற்போதைய கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தற்போதைய கூட்டணி ஆட்சி பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அப்போது சித்தராமையா முதல்வராக வர தகுதியுடையவர்," என்று கூறினார்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக உள்ளடி வேலைகளை செய்து வருவதாக மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறி வருகிறார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரான எம்.பி. பாட்டீலே சித்தராமையா முதல்வராக வர வேண்டும் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் சிக்கபள்ளாபூர் காங்கிரஸ் எம்எல்ஏ கே.சுதாகரும் சித்தராமையா மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று கூறி இருந்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் சித்தராமையா மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருவது முதல்வர் குமாரசாமிக்கும், மஜத தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.