சித்தார்த்தாவின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாம் கிடைச்சாச்சு.. அந்த செல்போன் மட்டும் எங்கே?
பெங்களூர்: சித்தார்த்தாவின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாம் கிடைத்துவிட்டது, ஆனால் செல்போன் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா. 58 வயதாகும் இவர் முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணாவின் மருமகனாவார். இவருக்கு ரூ. 7000 கோடி கடன் ஏற்பட்டது. இதை அடைக்க காபி டே நிறுவனத்தை கோகோ கோலா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை மங்களூருக்கு தொழில் விஷயமாக தனது காரில் சித்தார்த்தா சென்று கொண்டிருந்தார். அப்போது உல்லால் அருகே உள்ள நேத்ராவதி ஆற்று பாலத்தில் காரை நிறுத்துமாறு கூறிய சித்தார்த்தா, தன் டிரைவரிடம் பாலத்திலேயே ஓரமாக காரை நிறுத்திவிட்டு காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
36 மணி நேரம்
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அவரை தேடி அலைந்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை, செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதில் 36 மணி நேரத்துக்கு பிறகு சித்தார்த்தாவின் உடல் கரை ஒதுங்கியது.
கிடைக்கவில்லை
சித்தார்த்தாவின் உடலுடன் அவரது பர்ஸ், அந்த பர்ஸில் இருந்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, அடையாள அட்டைகள் என கிடைத்துவிட்டன. ஆனால் அவரது செல்போன் மட்டும் கிடைக்கவில்லை.
போலீஸார்
இந்த செல்போனில் பேசிய படியே அவர் காரிலிருந்து இறங்கி ஆற்றுப்பாலத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதால், அந்த போனில் என்ன இருக்கிறது, அவர் யாருடன் பேசினார் போன்ற விவரங்களை போலீஸார் கண்டுபிடிக்க செல்போன் தேவைப்படுகிறது.
செல்போனை தேடும் போலீஸ்
மேலும் இவர் யாருடனோ பேசிய பிறகே யாருடைய தூண்டுதலின் பேரிலேயே அப்படியே ஆற்றில் குதித்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் யார் அந்த நபர் என்பது குறித்து கண்டறிய போலீஸார் செல்போனை தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் கோரி வரும் நிலையில் அந்த செல்போன் கண்டுபிடிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.