9 மணி நேரம் ஜம்முனு தூங்குணா ரூ. 10 லட்சம் பரிசு.. இது கனவு இல்ல பாஸ்.. நிஜம் தான்!
தூக்கம் பற்றிய ஆய்வுக்காக வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளது வேக்ஃபிட் நிறுவனம்.
பெங்களூரு: 'எப்பப் பாரு படுத்துத் தூங்கிக்கிட்டே இருக்க.. சோம்பேறி.. சோம்பேறி..' என வீட்டில் திட்டு வாங்குபவரா நீங்கள்? அப்படியென்றால் ரூ. 10 லட்சம் பரிசு தரும் இந்த வித்தியாசமான போட்டிக்கு தகுதியான ஆள் நீங்கள் தான்.
'வேலைக்கு போகவே பிடிக்கவில்லை.. எப்போது பார்த்தாலும் படுத்துத் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.. இதற்கு யாராவது சம்பளம் கொடுத்தால் தேவலை..' என புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு லட்டு மாதிரி ஒரு வாய்ப்பைத் தருகிறது பெங்களூருவைச் சேர்ந்த வேக்ஃபிட் என்ற நிறுவனம்.
அதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத்
பிரபல மெத்தை நிறுவனமான இது நிம்மதியான தூக்கம் பற்றிய ஆய்வை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது.
இது 2வது சீசன்
தங்களது ஆய்வுக்காக இது 100 நாள் தூங்கும் போட்டியையும் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தினமும் 9 மணி நேரம் தூங்கி எழ வேண்டும். இதுதான் போட்டியாளர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை. என்னது தூங்கி எழுந்தால் போதுமா.. இப்படி ஒரு போட்டியா என ஆச்சர்யப்பட வேண்டாம். ஏற்கனவே கடந்தாண்டு இதன் முதல் சீசன் நடந்து முடிந்தது. தற்போது நடைபெற உள்ளது இரண்டாவது சீசன் ஆகும்.
இந்த தகுதி போதும்
இதில் பங்கேற்க விரும்புவர்களுக்கு இரண்டு தகுதிகள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதலாவது ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடுத்தது, 'கைப்புள்ள இன்னும் ஏண்டா முழிச்சுட்டு இருக்க.. தூங்கு..' என வடிவேலு ரேஞ்சுக்கு படுத்த 10 - 20 நிமிடங்களுக்குள் தூங்குபவராக இருக்க வேண்டும்.
10 லட்சம் பரிசு
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே மொத்தம் 100 நாட்கள் இந்த போட்டி நடத்தப்படும். தினமும் எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இறுதியில் இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசுப்பணமும், சாம்பியன் என்ற பட்டமும் தரப்படும்.
தொலைந்து போன தூக்கம்
இதுதொடர்பாக வேக்ஃபிட்.கோ நிறுவனர் சைத்தன்யா ராமலிங்க கவுடா கூறுகையில், "அனைவருக்குமே 2020ம் ஆண்டு மிக கடுமையான ஆண்டாக அமைந்து விட்டது. கொரோனா பிரச்சினையால் எல்லோரும் வீட்டுக்குள்ளே முடங்கிகிடக்க நேரிட்டது. வீட்டிலேயே பணி செய்தவர்கள் பல்வேறு அழுத்தங்களையும் சந்திக்க நேரிட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தூக்கம் தான்.
தூக்கத்தின் மகத்துவம்
பலரும் நாள்கணக்கில் தூக்கம் வராமல் தவித்தனர். அதனால்தான் தூக்கத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில் இந்த இண்டர்ன்ஷிப் ப்ரோகிராமை நாங்கள் துவங்கியுள்ளோம். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தூங்கச் செல்லும் முன் நொறுக்குத் தீனி போன்ற எதையும் சாப்பிடக்கூடாது, காபி, டீ மற்றும் மது வகைகளையும் அருந்தக்கூடாது. நல்ல ஆரோக்கியமான உடல்நலன் பெற்றிருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
3 லட்சம் விண்ணப்பங்கள்
தங்க இடம், சாப்பாடு, தூங்க வசதி செய்து தருவதோடு கூடவே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு 'ஸ்லீப் இண்டர்ன்ஷிப்' என்ற பெயரில் பணப்பரிசும் தருகிறார்கள் என்றால் விடுவார்களா கும்பகர்ணன்கள். இதுவரை இந்த ஆய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்களாம்.
நெட்டிசன்கள் ஆச்சர்யம்
பிக்பாஸ் வீட்டில் கூட சரியாக தூங்க விட மாட்டார்கள்.. பகலில் தூங்கினால் நாய் குரைக்கும். ஆனால் அந்த நிகழ்ச்சியை விட இந்தப் போட்டி எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதாகவும், தூங்கிக் கொண்டே சம்பாதிக்க இப்படி எல்லாம் வழி உள்ளதா என நெட்டிசன்கள் இந்தப் போட்டி பற்றி கமெண்ட் செய்து வருகின்றனர். 'இதோ நாங்க ரெடி..' என கலாய்த்து மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.