சசிகலா வெளியே வரப் போகும் "டைம்" இதுதானாம்.. திடீர்னு கிளம்பி பரவி வரும் புதிய தகவல்!
சசிகலா விடுதலை குறித்த செய்தி பரபரப்பாக கசிந்து வருகிறது
பெங்களூரு: இன்னும் ஓரிரு நாளில் பெங்களூரு பார்ப்பன சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார் என்று சுதாகரன் தெரிவித்துள்ளார்... ஆனால், சிறைத்துறை சம்பந்தமாக எந்தவித தகவலும் இதுகுறித்து வரவில்லை.. இந்நிலையில், சசிகலா என்றைக்கு விடுதலையானாலும், ராத்திரி 9-30 மணிக்குதான் அவரது விடுதலை நேரம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதிமுக, அமமுக என அரசியல் வட்டாரமே குஷியாகி உள்ளது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருஷ சிறை தண்டனையும், ரூ 10 கோடியே 10 லட்சம் அபராதமும் விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது..
ஒருவேளை அந்த அபராத தொகையை கட்டவில்லையானால், மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் அந்த அபராதத் தொகையான ரூ.10.10 கோடி செலுத்தப்பட்டது.
ஜெ.நினைவு நாள்
அதனால், சசிகலா எந்த நேரத்திலும் சிறையில் இருந்து விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி அவர் சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள்.. ஜெயலலிதா நினைவு நாளைக்கு முன்பேயே வந்துவிட வேண்டும் என்று சசிகலா நினைக்கவும், கண்டிப்பாக 3-ம்தேதி வாக்கில் சசிகலா வருவார் என்ற தகவல் கசிந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், மறுபடியும் சசிகலா விடுதலை குறித்த தகவல் பலமாக அடிபடுகிறது.
உளவுத்துறை
சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் தொடர்பாக கர்நாடக உள்துறைக்கு அம்மாநில உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது... அதன்படி, சசிகலா விடுதலையாகும் நாளில், அவரது தொண்டர்கள், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு சசிகலாவை அழைத்து செல்ல வரலாம் என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதில் சிறைத்துறை கவனமாக உள்ளது.
தொண்டர்கள்
அதனால் தொண்டர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மற்ற கைதிகளுடன் சேர்த்து அவரை விடுதலை செய்யாமல், சற்று நேரம் தாமதப்படுத்தி வெளியே அனுப்பவும் யோசனை நடக்கிறதாம். அதாவது, இரவு 7 மணிக்கு மற்ற கைதிகள் விடுதலை ஆவார்களாம்.
பாதுகாப்பு
சசிகலாவை மட்டும் இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யலாம் என்று முடிவாகி உள்ளதாம். கர்நாடக உளவுத்துறையின் அறிக்கையின்படி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
உண்மையா?
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் இதுவரை வரவில்லை.. சசிகலா "இந்த நாளில் விடுதலை ஆவார்" என்று ஏற்கனவே பலமுறை செய்திகள் வந்து போயின.. ஆனால், இந்த முறை, விடுதலையாகும் நேரம் வரை குறிக்கப்பட்டுள்ளதால், ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இதனிடையே, இன்னும் ஓரிரு நாளில் பெங்களூரு பார்ப்பன சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை ஆகிறார் என்று சுதாகரன் தெரிவித்துள்ளார்.