சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதி கொடுக்கப்பட்டது உண்மையே.. பர பர அறிக்கை!
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மையே என்று கர்நாடக அரசின் உயர்மட்டக்குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மையே என்று கர்நாடக அரசின் உயர்மட்டக்குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மற்றும் இளவரசி அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கே சொகுசு வசதி செய்து தரப்பட்டு இருப்பதாக நிறைய புகார்கள் எழுந்தது.
அவர்கள் அடிக்கடி வெளியே சென்று வருவதாகவும் புகார்கள் வந்தது. இந்த நிலையில் சசிகலா சொகுசு வசதி பெற்று இருக்கிறாரா என்று ஆராய, ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபாதான் முதல்முறையாக இதுகுறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதும் அவர் குற்றம்சாட்டினார். இதன்பின்பே இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தாக்கல் செய்ய அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
உண்மைதான்
அதன்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மையே என்று கர்நாடக அரசின் உயர்மட்டக்குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசிகலா மற்றும் இளவரசிக்கு நிறைய சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
5 அறை ஒதுக்கீடு
மொத்தம் இவர்கள் இருவருக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அந்த சிறையில் பெண் கைதிகளுக்கு மொத்தம் 28 அறைகள் இருந்துள்ளது. அதில் 5 அறைகள் சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டு இருந்தது. 23 அறை மட்டுமே மற்ற கைதிகள் பயன்படுத்தினார்கள்.
தனி சமையல் அறை
இதில் ஒரு அறை சசிகலாவிற்கு தனியாக சமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை சிறை நிர்வாகம் மறைக்க முயற்சித்துள்ளது. ஆனால் கடைசியில் அறையில் இருந்த மஞ்சள் தூள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளியே சென்றனர்
அதேபோல் சிறையில் இருவரும் சாதாரண உடையில் இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சியில் இருப்பது போல இவர்கள் வெளியே சென்று வந்திருக்கிறார்கள். இவர்கள் அந்த நேரத்தில் பார்வையாளர்களை சந்திக்கவில்லை என்றும் விசாரணை குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை அறிக்கையில் விரிவாக தகவல்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பெரிய பிரச்சனை
இந்த விசாரணை அறிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இதில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். சசிகலா மீதும் சிறை நிர்வாகம் மீதும் எப்போது வேண்டுமானாலும் கர்நாடக அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.